தேவர் என்பது ஜாதியின் அடையாளமாக பார்க்க வேண்டியதில்லை.. கவிஞர் வைரமுத்து!
சென்னை: தேவர் என்பது ஒரு ஜாதியின் அடையாளம் என்று யாரும் தனித்துப் பார்க்க வேண்டியதில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வைரமுத்து, ஜாதியின் பெயர் பழங்கால பெரியவர்களின் பெயரோடு ஒட்டி வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுகவின் வைகோ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தனர்.

அதேபோல் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தனர். அதேபோல் கவிஞர் வைரமுத்துவும் மரியாதை செலுத்தினார். இதன்பின் வைரவமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த காலத்தில்
பெருமைக்குரிய பெரியவர்களின் பெயர்களோடு ஒட்டியிருக்கும் பின்னொட்டு சாதிப்பெயர்கள் என்று கருதப்படக் கூடாது.
அவை அந்தந்தக்காலப் புழக்கங்கள் அடையாளங்கள் மற்றும் ஆகுபெயர்கள். ஜி.டி.நாயுடுவை நாயுடு என்றே அழைக்கலாம், உ.வே.சாமிநாதய்யரை
அய்யர் என்றே விளிக்கலாம், வ.உ.சிதம்பரம்பிள்ளையைப் பிள்ளை என்றே வழங்கலாம். இவற்றுள் எதுவும் அவர்களின் சாதி அபிமானத்தின்
சாட்சி அல்ல. அதைச் சாதிக்கு மட்டுமான பெருமிதமாகக் கருதுவதுதான் சமூகப் பிழை.
அப்படித்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பட்டப் பெயரும். இவை யாவும் அவரவர் காலத்துக் குறியீடுகளே அவற்றை அழிப்பதற்கு
நமக்கென்ன உரிமை? நானோ என் மகன்களோ சாதிப்பெயர்களை இட்டுக்கொள்ள மாட்டோம். என் பாட்டன்களோஎன் தந்தையோ இட்டுக்கொண்டதை நாங்கள் எப்படித் தடுக்க முடியும் அல்லது அழிக்க முடியும்.
சாதிக்கு முன் சாதிக்குப் பின் என்று இரண்டு காலங்கள் உண்டென்று வரலாறு வகிர்ந்து சொல்லட்டும். ஆதலால், ஓங்கிச் சொல்லலாம். தேவர் திருமகன் வாழ்க; தேவர் திருப்பெயர் வாழ்க; தேவர் தியாகங்கள் வாழ்க என்று பதிவிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் கருத்து புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications