விஜய் கரூர் செல்ல.. மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம்.. தவெக மனுவுக்கு டிஜிபி அலுவலகம் பதில்!
சென்னை: "விஜய் கரூர் செல்லும் தேதி, நேரம், இடம், வரும் வழி, நிகழ்ச்சி நிரல் விவரத்தை எஸ்.பிக்கு சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களை அளித்த பிறகு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்." என டிஜிபி அலுவலகம் பதில் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டு வந்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சியினரும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். சம்பவத்தன்று இரவே சென்னைக்கு திரும்பிய தவெக தலைவர் விஜய், அடுத்த சில நாட்களில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
கரூர் துயரச் சம்பவம் நடைபெற்று 11 நாட்களாகிவிட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் அல்லது அந்தக் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கூட கரூர் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இது அரசியல் ரீதியாக பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.
விஜய் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று ஆறுதல் கூறினார். அப்போது, எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு. என்று வருத்தப்பட்டதுடன் விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் கரூர் சென்று மக்களை சந்திப்பதற்காக பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் ஆன்லைன் மூலம் அனுமதி கேட்டுள்ளனர். விஜய் சார்பில் தவெகவினர் இன்று நேரடியாக டிஜிபி அலுவலகம் சென்று, கரூர் சென்று மக்களை சந்திப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். கரூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் எந்த தேதியில் அனுமதி கொடுத்தாலும் அன்று தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபி அலுவலகத்திற்கு தவெக தரப்பினர் அனுமதி கோரி மின்னஞ்சல் அனுப்பி இருந்த நிலையில் டிஜிபி அலுவலகம் பதில் அளித்துள்ளது. "தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம் எனவும் பயண விவரங்கள் கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
"விஜய் கரூர் செல்லும் தேதி, நேரம், இடம், வரும் வழி, நிகழ்ச்சி நிரல் விவரத்தை எஸ்.பி.க்கு சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களை அளித்த பிறகு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். விஜய் கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யை தவெக அணுகலாம்" என டிஜிபி அலுவலகம் பதில் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications