"ஓபனா" சொல்லிட்டாரே.. புள்ளி வைத்த பாஜக.. கோலம் போட்ட தினகரன்.. ஒரே போடு
ஓபிஎஸ் குறித்து தன்னுடைய பேட்டியில் முக்கிய தகவல் ஒன்றை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னை: இடைத்தேர்தலில் திமுகவிற்கு எதிரான மனநிலை உள்ளதால் இந்த முறை நாங்கள் வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளது என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. அம்மாவின் கட்சி தீயவர்களிடம் உள்ளது என்பதை உணர்ந்து அதிமுக தொண்டர்கள் எங்களிடம் வருவார்கள் என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உறுதி தெரிவித்துள்ளார். அத்துடன் ஓபிஎஸ் குறித்தும் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, எப்படியும் தன்னை சேர்க்க போவதில்லை என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட ஓபிஎஸ்ஸும் வந்துவிட்டதாக தெரிகிறது.. இதனால் ஓபிஎஸ்ஸுக்கு பெரிதாக நஷ்டம் இருக்காது என்கிறார்கள்.
காரணம், இரட்டை இலை முடங்கி விடும் என்றாலும், அதிமுகவை கைப்பற்ற பாஜகவுடன் சேர்ந்து வேறு கணக்குகளை போடக்கூடும்... அல்லது பாஜகவில்கூட கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் எங்கே.. ஏமாற்றம்! பட்ஜெட் பற்றி டிடிவி தினகரன் கருத்து
பாஜக நிழல்
அதேபோல, டிடிவி தினகரனை பொறுத்தவரை கடந்த 6 மாத காலமாகவே, பாஜகவின் சாயலாக ஒலித்து வருகிறார் என்கிறார்கள்.. ஓபிஎஸ் மீதான ஆதரவும் வெளிப்படையாகவே தினகரனுக்கு கூடி வருவதை செய்தியாளர்கள் கூட்டத்தில் கவனிக்க முடிகிறது. நேற்றுமுன்தினம் அளித்த பேட்டியிலும், "அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும். அப்போது தான் திமுக என்ற அரக்கனை வெல்ல முடியும்... இதை தான் ஓபிஎஸ் சொல்கிறார்... ஒருசிலரின் சுயநலத்தால் அதிமுக பலவீனமடைந்து எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது, திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நாங்கள் சொல்வதையே, ஓபிஎஸ்ஸும் சொல்லி வருகிறார்" என்று கூறியிருந்தார்..
கிட்ட கிட்ட நெருங்கி
இந்நிலையில், தற்போதும் ஒரு பேட்டி தந்துள்ளார் டிடிவி தினகரன்.. தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்துக்கு சென்னை அமமுக கட்சி அலுவலகத்தில் தினகரன் மலர்தூவி மரியாதை செய்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வரும் 5-ம் தேதி முதல் எங்களது நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 10-ம் தேதிக்கு மேல் எங்களது நிர்வாகிகள் கூறியதும் தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் செல்ல உள்ளேன். ஒருசிலரின் சுயநலத்தால், பதவி வெறியால் பணத்திமிரால் தான் 2021 தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தது என உங்கள் அனைவருக்கும் தெரியும்.
திருந்தாத திமுக
தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னைச் சார்ந்த 40 நபர்களுக்கு மட்டும் வாய்ப்புக் கொடுங்கள் என்று என்னிடம் பேசியவர்களிடம் தெரிவித்தேன். அது யாரால் நின்றது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த குளறுபடியால், திமுக திருந்தி இருக்கும் என்று நினைத்து ஆட்சி பொறுப்பை தமிழக மக்கள் அளித்தார்கள்... ஆனால் அவர்களும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியால் ஈரோடு மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால் திமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
1000 ஓட்டுக்கள்
அம்மாவின் பிள்ளைகள் ஒருங்கிணைந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என கூறினேன். எங்களுடைய ஜனநாயக கடமையை நாங்கள் ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் ஓட்டுத்தான் வாங்கியுள்ளோம். இருந்தாலும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு எதிரான மனநிலை உள்ளதால் இந்த முறை நாங்கள் வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளது. அம்மாவின் கட்சி தீயவர்களிடம் உள்ளது என்பதை உணர்ந்து அதிமுக தொண்டர்கள் எங்களிடம் வருவார்கள்.
திருந்தலயே
காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்துவது நல்ல யோசனை தான். இருந்தாலும் நல்ல படித்த இளைஞர் எங்கள் வேட்பாளர். அவரையே பொது வேட்பாளராக நிறுத்தலாமே? தீய சக்தி திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒரு நல்ல கூட்டணி அமைத்தால் அதைக் கண்டிப்பாக நாங்கள் பரிசீலிப்போம். நான் எடப்பாடி பழனிசாமி போல உச்சத்தில் இருந்து செயல்படுபவன் அல்ல. திமுகவை வீழ்த்துவதற்காக பன்னீர்செல்வம் செயல்பட்டால் அவருடன் இணைந்து பேச திறந்த மனதோடு இருக்கிறேன்" என்றார் தினகரன்.
புள்ளியை நோக்கி..
"தினகரனுடன் பேச தயார்" என்று இத்தனை நாளும் ஓபிஎஸ் மட்டுமே சொல்லி வந்த நிலையில், இப்போது பன்னீர்செல்வத்துடன் இணைந்து பேச திறந்த மனதோடு இருக்கிறேன் என்று ஓபனாகவே சொல்லியுள்ளார் தினகரன்.. அந்தவகையில், ஓபிஎஸ்ஸுடன் தினகரனும் நெருங்கிவந்துவிட்டார் என்றே தெரிகிறது.. குறிப்பாக, பாஜக என்ற புள்ளியை நோக்கி, ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா விரைந்து சென்று கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது..!!