"இயேசு" போட்டோ பாஜக ஆபீசில்.. "தப்பா நினைச்சிட்டோம் மேடம்".. திரளும் கிறிஸ்தவர்கள்.. பூரித்த வானதி
வடமாநில கிறிஸ்தவர்கள் குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: இந்தியாவின் உண்மையான மதசார்பற்ற கட்சி பாஜக மட்டும் தான் என்றும் வடமாநில கிறிஸ்தவர்கள் பாஜகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில் உள்ள விவரங்கள் இவைதான்:
மிசோரம் மாநிலத்தில் உள்ள பாஜக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அம்மாநிலத்தின் தலைநகர் ஐஸ்வாலுக்கு சென்றிருந்தேன்.. அப்போது பாஜக தலைமை அலுவலகத்தில் இயேசுகிறிஸ்துவினுடைய திருவுருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.

பைபிள்
பின்னர் அங்கு பைபிள் வசனங்கள் படிக்கப்பட்டு கூட்டம் தொடங்கியது, இது மிசோரத்தில் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இதே போன்று தான் நடந்தது. அங்குள்ள கிறிஸ்தவர்கள் பலரும் பாஜகவை நோக்கி வருவதையும் பாஜகவின் கட்சி பணிகளில் ஆர்வம் காட்டுவதையும் பார்க்கும்போது ஆச்சரியம் அளிக்கலாம், ஆனால் பாஜகவை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்காது.

கிரீட்டிங்ஸ்
ஏனெனில் இந்தியாவின் உண்மையான மதசார்பற்ற கட்சி பாஜக மட்டும் தான். சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களை மொத்தமாக அறுவடை செய்வதற்காக பெரும்பான்மையான இந்துக்களை அவமானப்படுத்துவதும், அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும், அவர்களின் பண்டிகைகளுக்கு ஒரு வாழ்த்துகூட சொல்லாததுதான் இங்கு மதச்சார்பின்மை என கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது மதச்சார்பின்மை என்பது ஏதாவது ஒரு மதத்திற்கு எதிராக செயல்படுவது அல்ல, அனைத்து மதங்களையும் உள்ளடக்கி அனைத்து மதங்களையும் மதிப்பதுதான். அனைத்து மதங்களின் உணர்வுகளையும் போற்றுவதுதான், உண்மையான மதச்சார்பின்மையாக இருக்கும்.

கண்கூடு
அந்த அடிப்படையில் பாஜக மட்டும்தான் அனைத்து மதத்தினரையும் சமமாக பாவிக்கிறது, இது வடகிழக்கு மாநிலங்களில் கண்கூடாக காண முடிந்தது, குறிப்பாக வடகிழக்கு மாநிலம் மிசோரத்தில் பாஜகவுக்கு வந்திருக்கும் கிறிஸ்தவர்களிடம் பேசினேன், அப்போது எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்டு பாஜகவின் செயல்பாடுகளை தவறாகவே நினைத்திருந்தோம், ஆனால் கட்சிக்கு வந்த பிறகுதான் உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. மோடி பிரதமரான பிறகு வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.

கிறிஸ்தவர்கள்
அவர் காட்டிய அக்கறையை எங்களை பாஜகவை நோக்கி ஈர்த்திருக்கிறது என கிறிஸ்தவ மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதேபோல கேரளாவில் நடந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பிஷப் தலைமை விருந்தினராக பங்கேற்று பேசியுள்ளார். கிறிஸ்தவர்களும் வாக்களித்ததால்தான் கோவாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜக மதசார்பற்ற கட்சி என்பதற்கு இதைவிட சான்றுகள் தேவையில்லை" என்று அறிக்கையில் வானதி தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications