உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி? அதிமுக புள்ளி வைக்க, தேமுதிக கோலம் போட.. ஆளுநரிடம் ஓடிய பிரேமலதா?
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு சி.பி.ஐ. விசாரணைக் கோரி மனு அளித்துள்ளார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த். இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்துவிட்ட நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தன.. அதேபோல எதிர்க்கட்சிகளும் கொந்தளித்து பேட்டிகளை தந்தன..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இதற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்தன.
உயிரிழப்புகள்: அந்தவகையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்தும் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது... நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது "என்று காட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு சி.பி.ஐ. விசாரணைக் கோரி மனு அளித்துள்ளார். பாஜக, அதிமுக தலைவர்களை தொடர்ந்து இந்த மனுவை அவர் அளித்திருக்கிறார்.. ராஜ்பவனை நோக்கி பிரேமலதா பயணப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்கிறார்கள் தேமுதிகவினர்.
கள்ளச்சாராய மரணம்: இரண்டு நாட்களுக்கு முன்பு, கள்ளச்சாராய மரணங்களில் சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சி.பி.ஐ. விசாரணை கோரியும் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். திமுக அரசுக்கு எதிராக, சென்னையில் நடந்த அந்த போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தந்திருந்தார் பிரேமலதா.
அப்போது, எடப்பாடியுடன் கள்ளக்குறிச்சி சம்பவம் உட்பட நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறார். விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பிரேமலதா மகன் விஜய பிரபாகரன் மனு கொடுத்த விசயத்தில் என்ன முன்னேற்றம் இருக்கிறது என கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி..
ஆதங்கம்: "கிணற்றில் போட்ட கல் மாதிரி அப்படியே இருக்கிறது, தேர்தல் ஆணையம் எந்த விஷயத்தில் உடனடியாக தீர்வு சொல்லியிருக்கிறது??" என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் பிரேமலதா.
இதற்கு பிறகு கள்ளக்குறிச்சி விஷயமாக இருவரும் பேசிக்கொண்டபோதுதான், கவர்னரை சந்தித்து சி.பி.ஐ. விசாரணைக்கோரி நீங்களும் மனு கொடுங்கள் என பிரேமலதாவுக்கு அட்வைஸ் கொடுத்தாராம் எடப்பாடி பழனிசாமி.. இதனையடுத்தே கவர்னரின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார் பிரேமலதா என்கிறார்கள் தேமுதிகவினர்.












Click it and Unblock the Notifications