எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிடக்கூடாது என கோர்ட் சொன்னதா? இன்பதுரை விளக்கம்
சென்னை: இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிடக்கூடாது என உயர் நீதிமன்றம் சொன்னதா? என்ன நடந்தது? அதிமுக வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அ தி மு க பொதுச்செயலாளர் என திருத்தம் செய்ய எடப்பாடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கூறினார்.
அ தி மு க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் பி.ராஜலட்சுமி, இளம்பாரதி ஆகியோர், 'இந்த வழக்கில் எதிர்மனுதாரர் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாரர்கள் குறிப்பிட்டு இருக்கும் போது தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எப்படி கோர்ட்டு அனுமதித்தது?' எனறு கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்த மனுவை எப்படி அனுமதித்தீர்கள்? என பதிவுத்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். திருத்த மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்டு 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதனிடையே ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பியதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அ தி மு க வக்கீல் பிரிவு இணை செயலாளர் இன்பதுரை செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ தி மு க பொதுச்செயலாளர் என்பதை உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை உறுதி செய்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்த போது எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தற்போது அவர், அ தி மு க பொதுச்செயலாளராக தொடர்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி இப்போது இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வது சரியாக இருக்காது என்பதால்தான் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்வி என்னவென்றால், இந்த வழக்கில் எதிர்மனுதாரர் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு இருக்கும்போது பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும்? என்பதுதான்.
நாங்கள் அதற்கான விளக்கத்தை எடுத்து சொன்ன போது, அப்படியானால் இந்த வழக்கில் எதிர்மனுதாரர் வரிசையில் இணை ஒருங்கிணைப்பாளர் என இருப்பதை பொதுச்செயலாளர் என மாற்றம் செய்யும்படி திருத்த மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார். அதன்படி, உடனடியாக திருத்த மனுவை தாக்கல் செய்ய உள்ளோம்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications