சென்னையை அசரடித்த அண்ணாமலை.. அதுவும் அந்த அரிசி மூட்டையை அலேக்கா தூக்கி.. அடடே வாயை பிளந்த சென்னை
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக நிவாரண உதவிகளை செய்து வரும் நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையை உலுக்கிவிட்டுப்போன புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்..
மழைநீர் : மழைநீரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இதைத்தவிர, வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அந்தவகையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் குற்றஞ்சாட்டி வருகிறார்.. அத்துடன், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழக அரசு: இதனிடையே, மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வில் இறங்கி உள்ளார் அண்ணாமலை.. முழங்கால் அளவு வெள்ள நீரில் நடந்து சென்று, வாட்டர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி, பால் பாக்கெட்டுகள், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடம், "எப்பவுமே இங்கே இப்படித்தான் தண்ணீர் தேங்குமா? திமுக அரசு உங்களுக்கு உதவிகளை செய்ததா? அரசின் நிவாரண உதவிகள் சரியாக கிடைக்கிறதா? உங்களை மீட்க கவுன்சிலர் வந்தாரா? உங்களை வந்து பார்த்தாரா? என்றெல்லாம் விசாரித்து செல்கிறார்.
விசாரணை: இதுபோல, வெள்ள நீரில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பகுதி மக்களையும் நேரில் சந்தித்து, அவர்களுக்கு உதவிகளையும் செய்து, அவர்களிடமும் இதே கேள்விகளை கேட்டு வருகிறார் அண்ணாமலை..
பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லும் கருத்துக்கள், தங்கள் தொகுதி குறித்து அவர்கள் சொல்லும் குறைகள் உள்ளிட்ட அனைத்தையும் குறிப்பெடுத்து கொள்கிறாராம்.. இதைவைத்தே திமுக அரசை கேள்வி எழுப்புவதுடன், மொத்த குற்றச்சாட்டையும், அறிக்கை வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வீடியோ: இந்நிலையில், அண்ணாமலையின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, பாஜக சார்பில் அலுவலகம் ஒன்றில் நிவாரண பொருட்கள் குவிக்க வைக்கப்பட்டுள்ளன.. பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக, மூட்டை மூட்டையாக அத்தியாவசிய இங்கு இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.. நேரடியாக இதை பார்வையிட்ட அண்ணாமலை, அங்குள்ள பொருட்களையும் ஒழுங்குப்படுத்தினார்.
அப்போது, ஒரு அரிசி மூட்டையை அசால்ட்டாக தூக்கி தன்னுடைய தோளில் வைத்து கொண்டார்.. அந்த அலுவலகத்தில் இன்னொரு பகுதியில் அந்த அரிசி மூட்டையை கொண்டு போய் வைத்தார்.. அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் இதை பார்த்து மிரண்டுபோய்விட்டார்கள்.
அதிகாரி: போலீஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை.. அதனால், எப்போதுமே உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துவார்.. ஒருமுறை இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது..
வேர்க்க விறுக்க அந்த வீடியோவில், பயிற்சிகளை செய்து கொண்டே, எல்லாருமே காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. உடற்பயிற்சிக்காக, 2 மணி நேரம் நம்ம கன்ட்ரோலில் எடுத்துக் கொண்டால், அன்றைய நாள்முழுவதும் மிச்ச 8 மணி நேரமும் நம்முடைய கன்ட்ரோலில் அந்த நாள் இருக்கும்.. என்று அறிவுறுத்தியிருந்தது, பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வதாலோ என்னவோ, அசால்ட்டாகவே இந்த அரிசி மூட்டையை தூக்கி முதுகில் வைத்துக் கொண்டார் அண்ணாமலை.. இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. எப்படியும் அந்த அரிசி மூட்டை 10 கிலோ இருக்கும் என்கிறார்கள்.. நோ சான்ஸ், 5 கிலோ மூட்டையாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
வீடியோ: "ஒத்த கையாலேயே, சாதாரணமாகவே மூட்டையை தூக்கறாரே தலைவர்" என்று பலரும் வீடியோவில் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். புரட்சி தளபதி, உழைப்பாளிகளின் அண்ணன் என்று பாஜகவினர் பாராட்டி வருகிறார்கள்.. மேலும் சிலரோ, "இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாமே" என்றும் கிண்டலடித்து வருகின்றனர்..
ஆகமொத்தம், அண்ணாமலை எந்த காரியத்தை செய்தாலும், அது வைரலாகிவிடுவதுபோல, இந்த அரிசி மூட்டையும் இணையத்தில் ரவுண்டு கட்டி வருகிறது..!!!












Click it and Unblock the Notifications