கோபத்தை கொப்பளித்த நிர்மலா.. மத்திய அரசு அலுவலகங்களில் முதலமைச்சர்கள் படம்! பாய்ண்டை பிடித்த பீட்டர்
சென்னை: மாநிலங்கள் தரும் வரிகளில் இயங்கும் விமானநிலையம், ரயில் நிலையம், பொதுத்துறை வங்கி, அஞ்சல் நிலையம்,ஒன்றிய அரசின் அலுவலகங்களில் மாநில முதலமைச்சர்கள் படங்களையும் வைப்பதுதானே நியாயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலத்துக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காமரெட்டி, பான்ஸ்வாடாவுக்கு அவர் சென்றார். அப்போது அங்குள்ள ரேசன் கடை ஒன்றில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்! அரசுக்கு பீட்டர் அல்போன்ஸ் நன்றி
பிரதமர் படம் எங்கே?
அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லாததால் கோபமடைந்த அவர், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூ.1 க்கு ரேஷனில் அரிசி வழங்கப்படுவதில் மத்திய அரசு முக்கிய பங்கும் வகிக்கும் நிலையில் பிரதமரின் படத்தை வைக்காதது ஏன்?'' என கேள்வி எழுப்பினார்.
மாவட்ட ஆட்சியர்
இதையடுத்து காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலை அழைத்த நிர்மலா சீதாராமன், ‛‛ரேஷன் அரிசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் சரியான பதிலை அளிக்காததால், நிர்மலா சீதாராமன் அரை மணி நேரத்திற்குள் இதுதொடர்பான விபரங்களை அறிந்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தெலுங்கானா அரசு
இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ், "நிர்மலா சீதாராமன் பேச்சு நகைச்சுவையானது. தேசிய உணவு விதிகளின் கீழ் 50 முதல் 55% வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு ரேஷன் அரிசி வழங்குகிறது. மீதமுள்ள 45% பேருக்கு தெலுங்கானா அரசு ரேஷன் அரிசி வழங்குகிறது. இதற்காக முதலமைச்சர் படத்தை வைக்கிறோமா?'' என கேள்வி எழுப்பினார்.
பீட்டர் அல்போன்ஸ்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், "மேடம்! நீங்க சொல்வது சரிதான்! தென் மாநிலங்கள் கட்டும் வரிகளில் 30% மாநிலங்களுக்கு. 70%ஒன்றிய அரசுக்கு. மாநிலங்கள் தரும் வரிகளில் இயங்கும் விமானநிலையம், ரயில் நிலையம், பொதுத்துறை வங்கி, அஞ்சல் நிலையம்,ஒன்றிய அரசின் அலுவலகங்களில் மாநில முதலமைச்சர்கள் படங்களையும் வைப்பதுதானே நியாயம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.