விழுந்தது குறைவு; எண்ணியதோ அதிகம்? ; 5.5 லட்சம் வாக்குகளில் குழப்பம்! போட்டு உடைத்த ஏடிஆர்
சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் பதிவான வாக்குகளுக்கும் இடையே 5.5 லட்சம் வாக்கு வித்தியாசம் இருப்பதாக ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களை ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய ஜனநாயக நடவடிக்கைகள் பற்றித் தொடர்ந்து பல ஆய்வுகளை வெளியிட்டுவரும் தன்னார்வல அமைப்பு ஏடிஆர். அசோஷியேசன் ஃபார் டெமாக்ரடிவ் ரெஃபார்மன்ஸ் என்பது சுருக்கம் தான் இது. இதைத் தமிழில் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்று சொல்லலாம். இந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பல பின்புலங்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. வேட்பாளரின் சொத்து விவரம், குற்றப் பின்னணி எனப் பல தரவுகளை இந்த அமைப்பே இந்தியா முழுவதும் திரட்டி வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது.

இந்த ஏடிஎஸ் அமைப்பு 2024 மக்களவைத் தேர்தல் பற்றிய சில விவரங்களை இப்போது வெளியிட்டுள்ளது. அதில் கிட்டத்தட்டப் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் 5.5 லட்சம் வித்தியாசம் இருந்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு ஒன்றும் புதியதாக வெளியாகவில்லை. தேர்தல் சமயத்தில் பதிவான வாக்கு விவரங்களை வெளியிட்டதில் தேர்தல் ஆணையம் சில குழப்பமான தரவுகளை வெளியிட்டது.
வாக்குப்பதிவு அன்று இரவு வெளியான தரவுக்கும் மறு நாள் காலை அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும் முரண்பாடுகள் இருந்தன. ஆகவே, அதைப் பற்றி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்திருந்தனர். அப்போது இந்த விவகாரம் சர்ச்சையானது.

இதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஏடிஆர் ஒரு ஆய்வை எடுத்துள்ளது. அதில் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் பதிவான வாக்குகளுக்கும் இடையே சுமார் 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் 362 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தும் அவை எண்ணப்படவில்லை என்றும் 176 வாக்குச் சாவடிகளில் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளைவிட சுமார் 35 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகச் சேர்த்து எண்ணப்பட்டு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் இந்த அமைப்பு ஒரு புதிய குண்டை தூக்கி வீசியுள்ளது.
"தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி 538 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை எடுத்துக் காட்டியுள்ளன. ஆகவே இந்த 538 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் ஏற்பட்டுள்ள வித்தியாசம் பற்றித் தேர்தல் ஆணையம் முறையாக விளக்கம் அளிக்க வேண்டும்" என்கிறார் ஏடிஆர் நிறுவனர் ஜக்தீப் சோக்கர்.

ஏடிஆர் இணையத்தில் வெளியாகியுள்ள தரவுகளின்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்று முதல் 3,811 வாக்குகள் வித்தியாசம் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. முன்னதாக இந்த வித்தியாசம் 16,791 வரை இருந்துள்ளது. ஏடிஆர் அறிக்கையின்படி குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி, கேரளாவில் உள்ள அட்டிங்கல், லட்சத்தீவு மற்றும் டையூ டாமன் ஆகிய இடங்களில் மட்டுமே முறையாக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன என்றும் அங்கே இந்த வாக்கு வித்தியாசங்கள் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதில் குஜராத்தில் பாஜகவும் கேரளாவில் காங்கிரசும் வென்றுள்ளன. மற்ற இரண்டிலும் காங்கிரசும் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே குஜராத் சூரத் தொகுதியில் வெற்றி அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
இந்த அறிக்கை உண்மையா? இல்லையா? என்பது பற்றி தேர்தல் ஆணையம் விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்ஒய் குரேஷி கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர், "சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். யாராவது முரண்பாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினால், கேள்விகள் எழுவதற்கு முன்பு தவறான புரிதல்களை அகற்ற ஆணையம் முயல வேண்டும்" என்றும் அவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தேர்தல் ஆணையம் 17சி படிவத்தைப் பற்றிய விவரங்களை வெளியிடுவதில் தாமதம் செய்து வந்தது. அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருந்தது. பாஜகவுக்கு இந்த 2024 மக்களவைத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கானப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைந்தது. ஆகவே, என்.டி.ஏ கூட்டணியிலிருந்த நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரது ஆதரவில் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருந்த காங்கிரஸ் இந்த முறை இந்தியா என்ற கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 232 இடங்களில் வெற்றி பெற்றது. தனியாகக் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றியை உறுதி செய்திருந்தது.












Click it and Unblock the Notifications