ஐசியூவில் உள்ள கொரோனா நோயாளிகளின் நிலை என்ன?.. ஓமந்தூரார் மருத்துவமனையில் விளக்கும் டிஜிட்டல் போர்டு
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ளுவதற்காக மருத்துவமனை வளாகத்தில் டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் எடுத்துள்ளார்.
பொதுவாக ஐசியுவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை பார்வையிட யாருக்கும் அனுமதி அளிக்கப்படாது. தற்போது கொரோனா சூழலால் கண்டிப்பாக மருத்துவமனை பக்கமே செல்ல முடியாது.
கொரோனாவின் 2-ஆவது அலையின் கடுமையான பாதிப்பால் பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஐசியுவில் அவரவர் உடல்நிலைக்கேற்ப சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மருத்துவக் கல்லூரி
அந்த வகையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியிலும் ஏராளமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறித்த விவரங்களை அறியாமல் உறவினர்கள் மருத்துவமனை வாயில்களில் ஒருவித பதற்றத்துடனே காணப்பட்டு வந்தனர்.

உள்நோயாளிகள்
இந்த நிலையில் கொரோனா ஐசியூ உள்நோயாளிகளின் நிலவரம் குறித்து ஓமந்தூரார் எஸ்டேட் மருத்துவமனையில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் வார்டு நம்பர், பெயர், வயது, பாலினம், மருத்துவ நிலை என 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உடனுக்குடன் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நோயாளி
அதில் மருத்துவ நிலை என்ற பிரிவில் நோயாளி மிகவும் கவலைக்கிடம், கவலைக்கிடம், சீரான நிலை என்பதை நிறங்களின் அடிப்படையில் குறித்து வெளியிட்டு வருகிறார்கள். மிகவும் கவலைக்கிடம் என்ற பதம் சிவப்பு நிறத்திலும் கவலைக்கிடம் என்ற பதம் ஆரஞ்ச் நிறத்திலும் சீரான நிலை என்பது வெள்ளை நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளது.

பாராட்டுகள்
இந்தப் பலகையை பார்த்து ஐசியூவில் உள்ள நோயாளிகளின் நிலையை உறவினர்கள் அறிந்து கொள்ளலாம். அது போல் காலை 8 மணி நிலவரம் என நேரங்களும் குறிப்பிடப்படுகிறது. இதை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். பதவியேற்ற ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் மா சுப்பிரமணியன் செய்துள்ளது நல்லாட்சியின் நேர்மறை சமிக்ஞைகள் என பாராட்டப்படுகின்றன.












Click it and Unblock the Notifications