பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்! தட்டு தடுமாறும் தக் லைஃப்! மன்னிப்பு கேட்ட மணிரத்னம்! என்ன சொன்னார்?
சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி ஆகியோர் நடித்திருந்த தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து இருக்கும் நிலையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். நாயகனை கொடுப்போம் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல நடிப்பு பல்கலைக்கழகம் என்றால் தற்போதைக்கு கமல்ஹாசன் தான்.
இருவரும் இணைந்த நாயகன் திரைப்படம் இன்று வரை இளம் இயக்குனர்களுக்கு ஒரு பாட புத்தகம் போலவே என்பார்கள். அந்த வகையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் இந்த கூட்டணி இணையும் என்ற அறிவிப்பே பலரது எதிர்பார்ப்பை எகிற செய்தது.

கூடுதலாக சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் தக் லைப் படத்தில் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து படத்துக்கு இசையமைப்பாளராக ஏஆர் ரகுமானும் இணைந்தார். அவரது இசையமைப்பில் வெளியான பாடல்களும், ட்ரெய்லர், டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடலும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இந்த நிலையில் கர்நாடகா தவிர்த்து உலகம் முழுவதும் கடந்த ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் வெளியானது.
3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியான நிலையில் படம் எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதுவரை சமூக வலைதளங்களில் ஒரு விமர்சனம் கூட தக் லைஃப் படத்திற்கு ஆதரவாக இல்லை. அந்த அளவுக்கு படத்தை அடித்து துவைத்து எடுத்து வருகின்றனர் ரசிகர்கள். படம் வெளியாகி 9 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 50 கோடி ரூபாய் வசூலை தொடவே போராடுவதாக சொல்லப்படுகிறது.
இதனால் போட்ட முதலீடு கிடைக்குமா என்பதே கேள்விக் குறிதான் என்கின்றனர் சினிமா துறையினர். இந்த நிலையில் படம் தொடர்பாக முதன்முதலாக மனம் திறந்து பேசி இருக்கிறார் மணிரத்தினம். அதோடு ரசிகர்களிடமும் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக பேசி உள்ள அவர்," நானும் கமல்ஹாசனும் இணைகிறோம் என அறிவித்தவுடன் மற்றொரு நாயகன் படம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். இதனால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாயகனுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமே கிடையாது. முற்றிலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படத்தை வழங்க வேண்டும் என எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் கொடுத்ததை விட ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட நாங்கள் கொடுத்த தக் லைஃப் வேறொன்றாக இருந்திருக்கிறது. இதற்காக ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications