பாரத்தை இறக்கிய பா.ரஞ்சித்..“நான் பேசக்கூடாதுன்னு சொல்ல நீ யார்?” முற்போக்குவாதிகள் மீது காட்டம்
சென்னை: என் படைப்பை புரிந்துகொள்ளாமல் கோபப்படுபவனே முதல் குற்றவாளி என்று முற்போக்குவாதி என்று சொல்லிக்கொண்டு வலிகளை பேசுபவர்களை குற்றவாளிகளாக காட்டுவதாக இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், " ஒருவர் ஒரு பார்வையை தொடர்ந்து முன்வைத்து வரும்போது அதற்கு எதிராக பேச வேண்டி உள்ளது. அதையே பேசக்கூடாது, நீ இந்த மொழியில் பேசக்கூடாது. இப்படிதான் என்னிடம் பேச வேண்டும் என்றால் அதற்கு எனக்கு கவலையே இல்லை. நான் எப்படி பேச வேண்டும் என்று முடிவு செய்ய நீ யார்?

இன்னும் எத்தனை காலம் எனக்கு குரலாக நீ இருக்கப்போகிறாய். எப்படி என்னை ஏமாற்றிக்கொண்டு இருக்கப்போகிறாய். இது என்னுடைய குரல். எனக்கு வலிக்கிறது நான் பேசுகிறேன். என்னை இந்த ஊரை விட்டே வெளியில் போக சொல்கிறாய், நான் பேசுகிறேன். என் பிரச்சனையை நான் பேசக்கூடாது என்று சொல்ல நீ யார் என்று நான் கேட்கிறேன். நாங்கள் சொல்வது மூலமாக உனக்கு கோபம் வருகிறது என்றால் நீதானே முதல் குற்றவாளி.
அப்படியென்றால் உன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரி செய்ய முயற்சி செய். சரி செய்ய மனமின்றி, ஒரு எழுத்து, ஒரு படைப்பு உன்னை கலக்கமடைய செய்கிறது என்றால் நீ எவ்வளவு பெரிய பிரச்சனையில் இருக்கிறாய் என்பதை பார்த்துக்கொள். படைப்புதான் உன்னை தூண்டுகிறது என்றால் இத்தனை ஆண்டு காலம் உன்னை சாதிய மனநிலையில் வைத்திருந்தது யார்? இன்று நீ வெடிக்கிறாய்?
அடையாற்றுக்கரை புத்தகம் என்னுடைய மொழி. எனக்கு தெரிந்த ஒரு மொழியில் நான் எழுதுகிறேன். இதுவரை இந்த பிரச்சனை பற்றி யாருமே பேசவில்லை. கால்வாயில் இருந்த மக்கள் பற்றி, அகற்றப்பட்ட மக்கள் பற்றி யாருமே பேசவில்லை. நான் தானே பேச வேண்டும். அப்போது சொல்வீர்களா? 20 - 30 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட மக்கள் பற்றி இப்போது ஏன் பேசுகிறாய்? என்று யாராவது கேட்க முடியுமா? இது எவ்வளவு பெரிய முரண்.
அப்படியென்றால் இப்போது வரை ஆற்றங்கரையோரம் காலி செய்யாமல் உள்ள மக்களை பற்றி எப்படி யோசிப்பது? அந்த பெரிய பெரிய நிறுவனங்கள் மாற்றம் செய்யப்படாமல் இன்னும் அங்கேயே இருக்கிறார்கள். இதை பற்றி பேசுவது வன்முறையை தூண்டுமா? கலவரத்தை தூண்டுமா?
இதை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் முற்போக்கு என்ற போர்வையில் இன்னும் எத்தனை நாட்கள் ஒழிந்துகொள்ள முயல்கிறீர்கள்? ஒரு படைப்பின் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் அதற்கு திரிபு நோக்கத்தை உருவாக்கி அந்த நோக்கம்தான் சரியான நோக்கம் என்று ஒரு பார்வையை உருவாக்கி, யார் அந்த படைப்பை உருவாக்க முன்வந்து நின்றார்கள்.
தன்னுடைய வலிகளையும், பிரச்சனைகளையும் பேசுபவர்களையே குற்றவாளிகளாக மாற்றி அவனிடம் நீ செய்வது தவறு, துரோகம் என்று எதிர் நிலையில் இருப்பவர்கள்கூட சொல்வது இல்லை. ஆதரவு நிலையில் இருப்பவர்களாக உள்ள, யார் தங்களை முற்போக்காளர்களாக அறிவித்துக் கொள்கிறார்களோ, அவர்களே பேசுகிறார்கள்.
ஆகச்சிறந்த படிப்பாளர்களாக உள்ள பலர் இதை நம்பும் இடத்தில் இருப்பதுதான் ஆகச்சிறந்த அவலமாக நான் பார்க்கிறேன். விரைவில் புத்தகம் எழுதிய பிரபாகரன் கஷ்டப்படுவார். கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்படுவார். அல்லது அவரது நாவல் தடை செய்யப்படும். அப்படி நடந்தால் அவர் சரியான எழுத்தாளராக உள்ளார் என்று நான் நம்புவேன்." என்றார்.












Click it and Unblock the Notifications