"நானும், மாரியும் தமிழ் சினிமாவை அழிக்கிறோமா.. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்" – பா.ரஞ்சித் கொதிப்பு
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு வெளியான பைசன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக இயக்குநர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் சாதிய ரீதியான படங்களை மட்டுமே எடுக்கிறார்கள் என்று வலது சாரி சிந்தனையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பைசன் பட விழாவில் பேசிய பா. ரஞ்சித், நான், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் தான் தமிழ் சினிமாவை சீரழிக்கிறோமா. மற்ற இயக்குநர்களுக்கு தமிழ் சினிமாவை உயர்த்துவதில் பங்கில்லையா என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், அனுபமா, ரஜீஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பைசன் காளமாடன். இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகத்தினர் பைசன் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

நாங்க 3 பேர் தான்
திரையரங்க உரிமையாளர்களும் பைசன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர். பைசன் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித், அதிதி ஆனந்த், சமீர் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் பைசன் படத்தின் வெற்றி விழா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நேற்று நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பா. ரஞ்சித், "எப்போதுமே தமிழ் சினிமாவை சீரழிக்கிறார்கள் என்று என் போட்டோவை போட்டு தான் திட்டுவார்கள். இப்போதேல்லாம் மாரி செல்வராஜ் போட்டோ, வெற்றிமாறன் சார் போட்டோவையும் சேர்த்துவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் எங்கள் மூன்று பேரின் போட்டோக்கள் இருக்கின்றன. எப்போதும் எங்களைத் தான் திட்டுகிறார்கள். இப்போது காந்தாரா படம் வந்தபோதும் திட்டினார்கள்.
மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்
பெரிய படங்கள் ஏதாவது ஹிட் ஆன பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் சிலர், தமிழ் சினிமாவை அழித்த மூன்று இயக்குநர்கள் என்று எங்கள் மூன்று பேரை தான் திட்டுகிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் 300 - 400 படங்கள் வெளியாகின்றன. நான் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் தான் இயக்குகிறேன். மாரி செல்வராஜ் இதுவரை ஐந்த படங்கள் தான் இயக்கியுள்ளான்.
வெற்றி மாறனும் சுமார் ஏழு படங்கள் வரை தான் இயக்கியிருப்பார் என்று நினைக்கிறேன். அவரும் 2-3 வருடங்களுக்கு ஒரு படம் தான் எடுக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் இந்த 2 வருடங்களில் சுமார் 600 திரைப்படங்கள் வந்துவிடும். 600 படங்களில் எத்தனை படங்களை எத்தனையோ இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். இந்த தமிழ் சினிமாவை உயர்த்துவதில் அவர்களுக்கு எந்த பங்கும் கிடையாதா.
சீரழிகிறதா
அத்தனை படங்கள் வருகின்றன, அத்தனை இயக்குநர்கள் உள்ளனர். யார் அவர்கள், அவர்களெல்லாம் படமே இயக்குவதில்லையா. தமிழ் சினிமாவை உயர்த்த அவர்கள் மட்டும் எந்தப் படத்தையும் இயக்குவதில்லையா. எங்கள் மூன்று பேரை மட்டும் தமிழ் சினிமாவை சீரழிக்கிறோம் என்று கூறினால் எப்படி. இந்த 10 வருடங்களில் நான் மொத்தமாகவே ஏழு படங்கள் தான் இயக்கியுள்ளேன். அந்த 7 படங்களில் தமிழ் சினிமா சீரழிந்துவிட்டதா." என்றார். தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு ரஞ்சித் அளித்துள்ள இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications