நான் என்ன அந்த ஜாதிக்காரன் கெட்டவன்னா படம் எடுத்தேன்? டக்கென வந்த கேள்வியால் சீறிய பிரபல இயக்குநர்!
சாதி சான்றிதழால் தான் சாதி இருக்கிறது என்கிற ரீதியிலான இயக்குநர் ஆர்வி உதயகுமார் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சென்னை : "பள்ளிக்கூடத்தில் போய் சேரும்போதே விண்ணப்பத்தில் ஏன் சாதியை வைக்கிறீர்கள்? அங்கேயே முடித்துவிட்டால் யாருக்கும் என்ன சாதி என்பதே தெரியாமல் போய்விடும். ஒரு தலைமுறைக்குப் பிறகு சாதி என்பதே இல்லாமல் போய்விடும்." என இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியிருப்பது விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சாதி சான்றிதழ்கள் அரசுகளால் வழங்கப்பட்டு வருகின்றன.
சாதி சான்றிதழ்களால் தான் சாதி பிரிவினை இருப்பதாக தவறான புரிதலோடு, சாதி சான்றிதழ்கள் கூடாது என பிரபலங்கள் பேசுவது அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இதுதொடர்பாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆர்.வி.உதயகுமார்
ரஜினிகாந்த் நடித்த எஜமான், விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், கமல்ஹாசன் நடித்த சிங்கார வேலன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்க்கிய ஆர்.வி.உதயகுமார் கடைசியாக 2005ல் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற எனும் திரைப்படத்தை இயக்கினார். சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார் ஆர்.வி.உதயகுமார்.

சர்ச்சையில் சிக்கிய உதயகுமார்
இந்நிலையில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், சாதி பற்றி தெரிவித்துள்ள கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. மோகன் ஜி இயக்கத்தில் அண்மையில் வெளியான 'பகாசூரன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்காக திரையிடப்பட்டது. இயக்குனர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தை பார்த்தனர். பின்னர் இந்தப் படம் பற்றிப் பேசும்போது, ஆர்வி உதயகுமார் பேசிய கருத்து தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் ஆப்களில் தீமை
பகாசூரன் பட இயக்குநர் மோகன் ஜியை பாராட்டிப் பேசிய ஆர்வி உதயகுமார், "இந்தப் படம் எங்களைப் போன்ற தந்தைகளுக்கான படம், தாய்மார்களுக்கான படம். மொபைல் செயலிகளால் பல உயிர்கள் பறிபோகின்றன, குழந்தைகளின் வாழ்க்கை சீரழிகிறது. செல்போன்களை தீய நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கிறது. தேவை இல்லாத செயலிகள் நம் நாட்டுக்குள் வருவதை தடுக்க வேண்டும். வக்கிரத்தையும், வன்மத்தையும், சாதியை வைத்து சிலர் பேசுவதையும் வரவிடாமல் தடுக்க வேண்டும்." என்றார்.

சாதி - சர்ச்சை
மேலும் பேசிய ஆர்வி உதயகுமார், "அந்த சாதியா, இந்த சாதியா, இந்துக்களில் மேலா கீழா? இதெல்லாம் எதற்கு? பள்ளிக்கூடத்தில் போய் சேரும்போதே விண்ணப்பத்தில் இந்தியன் - இந்து அவ்வளவுதான். அதில் ஏன் சாதியை வைக்கிறீர்கள்? அங்கேயே முடித்துவிட்டால் யாருக்கும் என்ன சாதி என்பதே தெரியாமல் போய்விடும். ஒரு தலைமுறைக்குப் பிறகு சாதி என்பதே இல்லாமல் போய்விடும். சாதிகளைப் பற்றி யார் பேசினாலும் ஆப்களில் தானாக நீக்கப்படுவது போலக் கொண்டு வந்தால் நமது சமூகத்தை தரமானதாக கொண்டு வர முடியும்" எனத் தெரிவித்தார்.

சின்ன ‘கவுண்டர்’ ஏன்?
தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், சாதி பெயரே இருக்கக்கூடாது எனச் சொல்லும் நீங்கள் ஏன் 'சின்ன கவுண்டர்' என சாதி பெயரை வைத்து படம் எடுத்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆர்.வி.உதயகுமார், "தம்பி நீங்க ரொம்ப லேட்டு.. இதை நிறையே பேர் கேட்டுட்டாங்க.. சின்னக் கவுண்டர் என நான் படம் எடுத்தபோது ஏதாவது பிரச்சனை வந்ததா? சின்னக் கவுண்டர் நல்லவன் என்று தான் நான் படம் எடுத்தேன். மற்றவர்கள் கெட்டவர்கள் என படம் எடுக்கவில்லை. மற்றவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லும்போதுதான் பிரச்சனை வருகிறது. கவுண்டர்களாக மாறுங்கள் என்று நான் படத்தில் சொல்லவில்லை. அந்தப் படத்தில் சலவைத் தொழிலாளியை உயர்ந்தவராக காட்டியிருப்பேன்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications