இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
சென்னை: இயக்குநர் ஷங்கருக்கு எதிரான வழக்கில், விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்டுக் கொண்ட நிலையில், வழக்கு விசாரணையை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த 'எந்திரன்' திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் கதை காப்புரிமை மீறல் புகார் தொடர்பான வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இதனையடுத்து, சொத்து முடக்கத்தை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபர் அளித்த புகாரில் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கக் கூடாது என தெரிவித்து, சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சுரேந்தர் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன், அவருக்கு எதிரான வழக்குகளை புகார்தாரர் ஆரூர் தமிழ்நாடன் திரும்பப் பெற்றுள்ளதால் மூல வழக்கு ஏதுமில்லை என தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்டுக் கொண்டதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 15 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மேலும் அதுவரை வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications