வெற்றிமாறன், சூரி, விஜய்சேதுபதி "விடுதலை"- கலியபெருமாள், தமிழரசனின் தமிழ்நாடு விடுதலைப் படை கதையா?
வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படத்தின் ட்ரெய்லர் சொல்லும் காட்சிகள் எவை தெரியுமா?
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விடுதலை படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், 1980களின் மத்தியில் செயல்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படை, 1990களின் தொடக்கத்தில் நிகழ்ந்த வாச்சாத்தி வன்கொடுமை ஆகியவற்றின் கலவையாக இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் உருவானது விடுதலை திரைப்படம். நகைச்சுவை பாத்திரங்களில் நடித்த சூரி, கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விடுதலை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரில் ரயில் கவிழ்ப்பு சம்பவம், விடுதலைப் படையினர் எனப்படும் போராளிகளை தேடுதல், பெருமாள் வாத்தியார் என்ற தலைமறைவு போராளி குழு தலைவர், விசாரணையின் பெயரிலான பழங்குடிகள் மீதான வன்கொடுமை ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள அத்தனை காட்சிகளும் தமிழ்நாடு விடுதலைப் படை மற்றும் வாச்சத்தி வன்கொடுமை சம்பவங்களை வெளிப்படுத்துகிறது என்பது யதார்த்தமானது.
உதாரணமாக வானொலியில் அருமபுரிக்கு வரவேண்டிய ரயில், பாலம் ஒன்றில் விபத்துக்குள்ளானதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என செய்தி வாசிப்பு குரல் இடம்பெற்றுள்ளது. 1980களை நினைவூட்டும் வகையில் உள்ளன படக் காட்சிகள். 1980களில் தமிழ்நாட்டில் நடந்த ஒரே ஒரு மிக மோசமான ரயில் விபத்து என்பது மருதையாற்று பாலம் வெடிகுண்டு விபத்துதான். அதில் 35 பேர் பலியாகினர். 1987-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி இந்த மருதையாற்று பாலத்தில் மலைக்கோட்டை ரயில் அதிகாலையில் சென்றபோது வெடிகுண்டு மூலம் பாலம் தகர்க்கப்பட்டது. இது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் இந்தியாவில் பயணிகள் ரயில் ஒன்று போராளிக் குழு ஒன்றினால் தகர்க்கப்பட்டதும் இதுவே முதல் முறை.
தமிழ்நாட்டின் வட தமிழ்நாட்டில் தமிழ்நாடு விடுதலைப் படை பலமாக செயல்பட்டது. முந்திரிக்காடுகள்தான் தமிழ்நாடு விடுதலைப் படையின் பலமாக இருந்தது. தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் பொன்பரப்பி தமிழரசன். இவர்களது அரசியல் ஆசான் புலவர் கலியபெருமாள். தூக்கு தண்டனையில் இருந்து தப்பியவர். தமிழ்நாடு போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
1992-ல் சந்தனக் கடத்தல் வீரப்பன் தொடர்பான தேடுதல் நடவடிக்கையின் போது தருமபுரி அரூர் அருகே பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய உச்சகட்ட பாலியல் பலாத்கார சம்பவம்தான் வாச்சாத்தி வன்கொடுமை. வாச்சத்தி படுகொலையில் 34 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 18 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். 28 சிறுவர்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டனர். வாச்சாத்தி சம்பவத்துக்கு பழிவாங்க தமிழ்நாடு விடுதலைப் படை சில தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
மேலே குறிப்பிட்ட அனைத்தையுமே கலந்த கலவையாகவே, வெற்றிமாறன் தமது விடுதலை திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் என்பதையே ட்ரெய்லர் காட்சிகள் வெளிப்படுத்துகிறது. விடுதலைப் படையை தேடுதல், பெருமாள் வாத்தியாரை தேடுதல், விஜய் சேதுபதி பேசும் பிரிவினைவாதி வசனம், பாலியல் வன்கொடுமை செய்தல் என ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறனின் படங்கள் பெரும்பாலாலும் பல உண்மை சம்பவங்களை கோடிட்டுக் காட்டக் கூடியதாகவே இருந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications