தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம்.. முக்கிய மசோதாக்கள் தாக்கலாகிறதா?
சென்னை: தமிழக சட்டசபையில் தாக்கலான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

கடந்த 15 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார். இதையடுத்து தமிழக நிதிநிலை அறிக்கை தடைகளைத் தாண்டி என்ற தலைப்பில் கடந்த 19 ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டசபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த வேளாண் பட்ஜெட்டை உழவர் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார்.
முன் பண மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் தாக்கலான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது இன்றைய தினம் காலை, மாலை இரு வேளைகளும் விவாதம் நடத்தப்படுகிறது.
இன்றைய தினம் முக்கிய மசோதாக்கள் தாக்கலாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே உள்ளதாக குற்றம்சாட்டிய அதிமுகவும் பாஜகவும் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்யவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நாளை (பிப்ரவரி 22 ஆம் தேதி) துறை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பதில் அளிப்பார்கள்.












Click it and Unblock the Notifications