உதயநிதியின் துறையில் பணியாற்றும் திவ்யதர்ஷினி ஐஏஎஸ் மத்திய அரசு பணிக்கு அதிரடியாக மாற்றம்
சென்னை : திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே மத்திய அரசில் இளைஞர் நலத்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இன்னொரு ஐஏஎஸ் அகிகாரியும் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த திவ்யதர்ஷினியும் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வருண் குமார் திருச்சி சரக டி.ஐ.ஜி.ஆக பணியில் இருக்கிறார்.. இந்நிலையில் வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு செல்ல தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். தமிழக அரசு அனுமதி வழங்கியதன் பேரில், மத்திய அரசு பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். மத்திய அரசில் இளைஞர் நலத்துறை துணை இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி வந்திதா பாண்டேவை தொடர்ந்து தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது மத்திய அரசே அனுப்பிய கடிதம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யதர்ஷினியை மத்திய அரசுப் பணிக்கு மாற்றுவதாக தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தத்திற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் அனுப்பி இருக்கிறது.
அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள திவ்யதர்ஷினி, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் அந்தப் பதவியில் 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ பணியாற்றுவார். எனவே அவரை தமிழக அரசு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பணியில் திவ்யதர்ஷினி சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக அரசிடம் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சக்தி காந்ததாஸ் தொடங்கி இந்த லிஸ்ட் மிகப்பெரியது. அண்மை காலத்தில் மட்டுமே தமிழக அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றி வந்த எஸ்.கிருஷ்ணன், நீரஜ் மிட்டல், ராஜேஷ் லக்கானி ஆகியோர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டனர்.
அந்த வரிசையில் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த திவ்யதர்ஷினியும் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். திவ்யதர்ஷினி ஐஏஏஸ் யார் என்றால், சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். 2011-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.. முன்னதாக 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தன்னுடைய 24 ஆவது வயதில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். 2012-13 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.
2013-15 ஆம் ஆண்டுக் காலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் சார் ஆட்சியராகப் பணிபுரிந்தார். பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் துணை உள்துறை செயலாளராகவும், பொதுப்பணித்துறை செயலாளராகவும் பதவி வகித்தார். புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராகவும் இவர் நியமிக்கப்பட்டார். தருமபுரி மாவட்டத்தின் ஆட்சியராகவும் பணியாற்றினார்.
தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். தற்போது மத்திய அரசு திவ்யதர்ஷினியை உடனடியாக மத்திய அரசு பணிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பணியில் திவ்யதர்ஷினி சேர வேண்டும் என்று மத்திய அரசு கடிதத்தில் கூறியுள்ளது












Click it and Unblock the Notifications