Diwali 2025: தீபாவளி நாளில் குளித்தால் கங்கையில் நீராடிய பலன்.. கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் எது?
சென்னை: தீபாவளியன்று அனைவரும் கங்கையில் நீராட முடியாது என்பதால், வீட்டிலேயே கங்கா ஸ்நானம் செய்வது வழக்கம். தீபாவளி நாளில் அதிகாலை நேரத்தில், நாம் நீராடும் நீரில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். அதனால், இன்று எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்தாலே கங்கையில் குளித்த பலன் கிடைக்கும்.
தீபாவளி பண்டிகை இன்று (அக்டோபர் 20) நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். தீபாவளி பண்டிகை வருடம் தோறும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியிலோ அல்லது அமாவாசை தினத்தன்றோ வருகிறது. தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டுமில்லாது சமணம், புத்த மதம் மற்றும் சீக்கிய மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.

கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்த நாளாக பெரும்பாலான ஹிந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வட இந்தியாவில் ஸ்ரீராமபிரான் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாளாக இதை கருதுகின்றனர். வங்காளத்தில் காளி தேவியை வணங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
கங்கா ஸ்நானம்
தீபாவளி பண்டிகையன்று மக்கள் அதிகாலை எழுந்து உச்சந்தலையில் நல்லெண்ணெய் இட்டு வெந்நீரில் குளிக்கின்றனர். இப்புனித நாளில் இவ்வாறு எண்ணெய் தேய்த்து குளித்தால் கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். நதிகளிலேயே புனிதம் வாய்ந்ததாக கங்கை பெருமைப்படுத்தப்படுகிறது. ஆனால் எல்லோராலும் கங்கைக்குப் போய் குளிக்க முடியாதே.. அப்படி குளிக்க முடியாதவர்கள் வெந்நீரில் நீராடலாம். தீபாவளி அன்று எண்ணெய் வைத்து வெந்நீரில் குளிப்பது கங்கையில் குளிப்பதற்கு சமம் என்பது நம்பிக்கை.
கங்கா ஸ்நானம் செய்வது எப்படி?
குளிப்பதற்கு முதல் நாள் இரவே அந்த நீரில் ஆல், அரசு, அத்தி, புசு மற்றும் மாவிலைகளைப் போட்டு வைக்க வேண்டும். பின்னர் காலையில் எப்போது குளிக்க வேண்டுமோ அதற்கு முன்பாக சூடுபடுத்தி அந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி, நாம் இருக்கும் இடத்திலேயே 'கங்கா ஸ்நானம்' செய்ய முடியும் என்கிறார்கள் பெரியவர்கள்.
நீராடும் போது, கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று நீராட வேண்டும். கர்ம காரியங்களைச் செய்து வந்தால் தான் தெற்கு திசை நோக்கி நின்று நீராட வேண்டும். மேற்கு நோக்கி நின்று நீராடுவதால், உடல் வலி உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு முறை நீராடுவதற்கும் முன்பாக, ஒரு சொம்பு நீரில் மோதிர விரலைக் கொண்டு, 'ஓம்' என்று எழுதி, சில நிமிடம் தியானம் செய்ய வேண்டும். இதனால் அந்த நீர், கங்கையின் புனிதத்துவத்தை அடையும்.
தலையில் நீர்
எப்படிப் பிடித்தாலும், நெருப்பு மேல் நோக்கியே எரியும். நம் உடலில் உள்ள அக்னியும் மேல்நோக்கியே பயணிக்கிறதாம். எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்கும் சக்தி, நம்முடைய உடலில் மண்டை ஓட்டிற்கு மட்டுமே இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், நீராடும் போது முதலில் தண்ணீரால் காலை நனைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மேல்நோக்கி வந்து, இறுதியாக தலையில் நீரை ஊற்ற வேண்டும் என்கிறார்கள்.
முதுகில் தான் உடல் சூடு அதிகமாக இருக்கும். எனவே நீராடி முடித்ததும், முதலில் முதுகு பாகத்தைத்தான் துவட்ட வேண்டும் என்கிறார்கள். அதுவும் நீராடும் நீரில் துண்டை நனைத்து பிழிந்து துவட்டுவதுதான் சரியானது என்றும் சொல்லப்படுகிறது. உலர்ந்த துணியானது, உடலின் உள்சூட்டை வேகமாக பரவச் செய்து, பலவித நோய்களை உருவாக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்
தீபாவளி நாளான இன்று (அக்டோபர் 20) அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஐப்பசி மாதம் 3 ஆம் நாள் திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்கு மேல் இரவு 7 மணிக்குள் தீபாவளி பூஜையும், குபேர பூஜையும் செய்வது உத்தமம்.
நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அன்று கேதார கௌரி விரதம் கடைபிடிக்கலாம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினமான இன்று மாலை 3.45-க்கு தொடங்கி மறுநாள் (21.10.2025) மாலை 5.48 வரை அமாவாசை திதி உள்ளது. கேதார கௌரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து வீட்டில் கலசம் வைத்தோ அல்லது கோயிலுக்கு சென்றோ பூஜைகளைச் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications