தொடரும் பெரியார் சிலை அவமதிப்புகளுக்கு முடிவு கட்டுங்க.. குற்றவாளிகளை தண்டிக்கனும்..கி. வீரமணி
சென்னை: தமிழகத்தில் தந்தை பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிப்படும் நிகழ்வுகளுக்கு தமிழக அரசு முடிவு கட்டும் வகையில் குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
கோவை வெள்ளலூரில் திராவிடர் கழகத்தின் படிப்பகம் முன்பாக தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். மேலும் பெரியார் சிலை மீது காவி பொடியையும் வீசி உள்ளனர்.

வெள்ளலூர் போராட்டம்
இச்சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தினர் இன்று போராட்டம் நடத்தினர். இதில் பெரியார் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இச்சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுவும் மனநோயாளி வேலையா?
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படும் கயமைத்தனம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது. குற்றவாளிகள்மீதான நடவடிக்கைகள் - தண்டனைகள் என்பது மிகவும் மெத்தனமாகவே நடப்பது என்பது - கயவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது. கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றவாளிகள் மனநோயாளிகள் என்று சொல்லி, இத்தகைய வழக்கின் கோப்புகள் முடித்து வைக்கப்படும் போக்கு - காவல்துறையின் நடைமுறையாகவும் ஆகிவிட்டது.

முதல்வருக்கு அப்பீல்
தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் என்றும், இந்த அரசு பெரியார் கொள்கை வழி செயல்படும் அரசு என்றும், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதும், சமூகநீதியில் நமது முதலமைச்சர் தொடர்ந்து செய்துவரும் சாதனைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுவதுமான ஒரு காலகட்டத்தில், தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதை இணைத்துப் பார்க்கவேண்டும். முதலமைச்சர் முக்கியமாக இதில் கவனம் செலுத்தி, காவல்துறையை முடுக்கிவிட்டு (காவல்துறை முதலமைச்சரின் துறை) குற்றவாளிகள் - அதன் பின்னணியில் இருப்பவர்கள்மீதான நடவடிக்கை - தண்டனையை சரியான வகையில் எடுத்து விரைவுப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முடிவு கட்டுங்க
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற நிலை உருவாகும்போதுதான் - இதற்கொரு முடிவு எட்டப்பட முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று காவிகள் - காலிகள் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும்.












Click it and Unblock the Notifications