10 பேருடன் பிக்னிக் போல வரும் சின்ன கேப்டன்.. பிரிச்சு மேய்வதால் விரக்தியில் தேமுதிக வேட்பாளர்கள்!
சென்னை: தேமுதிகவின் சாபக்கேடுதான் என்னவோ அந்த கட்சியின் தேர்தல் பிரசாரம் என்பது விஜயபிரபாகரனை மட்டுமே நம்பி இருப்பது. ஆனால் விஜயபிரபாகரனோ, ஒவ்வொரு பிரசார பயணத்தையும் செம ஜாலியான பிக்னிக் டூர்போல நண்பர்களுடன் சேர்ந்து அனுபவிப்பதால் செலவுதான் எகிறுகிறது என்கின்றனர் அக்கட்சி வேட்பாளர்கள்.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பேசாமல் இருந்திருந்தால் தேமுதிக இடம்பெற்றிருக்கும். ஆனால் அம்மா பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜயபிரபாகரன், சுதீஷ் ஆகியோர் பேசிய பேச்சுகள்தான் கடைசியில் நடுத்தெருவுக்கு வந்தது தேமுதிக.

பிரசாரம்
இப்போது போனால் போகிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுகிறார். அவரால் பிற தொகுதிகளில் பிரசாரம் செய்ய முடிவதில்லை. சுதீஷூக்கு கொரோனா பாதிப்பு என்பதால் அவரும் பிரசாரம் செய்யவில்லை.

விஜயபிரபாகரன்
தேமுதிகவைப் பொறுத்தவரை இப்போதைய ஒற்றை பிரசார பீரங்கி சாட்சாத் விஜயபிரபாகரன்தான். அரசியலை பற்றி எந்த புரிதலுமே இல்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேச, அதை தேமுதிக தொண்டர்கள் ரசிக மனோபாவத்தில் கைதட்ட, அடேங்கப்பா நாம பெரிய தலைவருதான் என்கிற மமதையில் வலம் வருகிறார் விஜய பிரபாகரன்.

வேட்டை வேட்டையாம்
இப்போது சகாக்கள் படையும் ஒவ்வொரு தொகுதியாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் விஜயபிரபாகரன். விஜய பிரபகாரன் பேச்சினால் ஓட்டுகள் வருகிறதோ இல்லையோ அவரது அமர்க்களமான உணவு வேட்டையால் வேட்பாளர்கள் பாக்கெட்டில் ஆகப் பெரும் ஓட்டைகள் விழுந்து கொண்டிருக்கிறதாம். பிரசாரத்துக்கு போவதற்கு முன்னால் தொகுதியில் சிறப்பான சாப்பாடு என்பதுதான் விஜயபிரபாகரன் கோஷ்டியின் கேள்வியாம்.

வேட்பாளர்கள் அதிர்ச்சி
ஆஹா.. என்றபடி தலையை சொறிந்து கொண்டே, ஜகா வாங்கவும் முடியாமல் விருந்து வைத்து தாங்கவும் முடியாமல் விக்கல் எடுத்த நிலையில் விழிபிதுங்குகிறார்களாம் தேமுதிக வேட்பாளர்கள். இதுக்கு பேசாம அண்ணியாரே வந்திருந்தாலே போதுமே... என்கிற மனநிலையில் தத்தளித்து கொண்டிருக்கிறதாம் தேமுதிக கூடாரம். அப்புறம் ஒரு நேர சாப்பாட்டுக்கு 10 பேருக்கு லட்சங்கள் செலவு செய்தால்?












Click it and Unblock the Notifications