தேமுதிக யாருடன் கூட்டணி சேரும்.. தொடரும் இழுபறி.. இன்று கிடையாதாம்.. நாளைதான் அறிவிப்பு!
லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் இணைந்து போட்டியிட போகிறது, எத்தனை இடங்களில் போட்டியிட போகிறது என்பது குறித்த அறிவிப்புகள் நாளைதான் வெளியாகும்.
சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் இணைந்து போட்டியிட போகிறது, எத்தனை இடங்களில் போட்டியிட போகிறது என்பது குறித்த அறிவிப்புகள் நாளைதான் வெளியாகும். இதுகுறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி இறுதி வடிவத்தை பெற்று இருக்கிறது. அதிமுக, பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகளில், பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த கூட்டணியில் தேமுதிக சேருமா என்பதுதான் தற்போது பெரிய கேள்வி. இதற்காக பல நாட்களாக தேமுதிக - அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறது.
தோல்வி
இதுவரை 10க்கும் மேற்பட்ட தடவை பாஜக - அதிமுக தரப்பு தேமுதிக தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் ஒருமுறை கூட பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை. தேமுதிக அதிக இடங்களை கேட்பதாக அதிமுக தரப்பு கூறி வருகிறது.
சண்டை
தேமுதிக 7 லோக்சபா இடங்கள், ஒரு ராஜ்ய சபா சீட் கேட்பதாக செய்திகள் வருகிறது. ஆனால் பாஜக - அதிமுக தரப்பு 5 லோக்சபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று கூறி இருக்கிறது. இதனால் கோபம் அடைந்த தேமுதிக இடையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.
நடக்கவில்லை
ஆனால் திமுக கூட்டணியிலும் தேமுதிகவுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் தற்போது தேமுதிக மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
நல்ல முடிவு
சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதிமுக தேமுதிக கூட்டணி குறித்து இதில் ஆலோசித்தனர். இதன் முடிவில் தேமுதிக இரண்டு நாட்களில் நல்ல முடிவு எடுக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நாளை அறிவிப்பு
அதன்படி தேமுதிக யாருடன் இணைந்து போட்டியிட போகிறது, எத்தனை இடங்களில் போட்டியிட போகிறது என்பது குறித்த அறிவிப்புகளை நாளை வெளியிடும். இதுகுறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியுள்ளார். தேமுதிக சார்பாக நடந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களிடம் நாளை அறிவிப்போம் என்று பிரேமலதா உறுதி அளித்து இருக்கிறார்.