"இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது.." தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்த கலவையாக உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2022-2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு உதவும் திட்டங்கள் எதுவும் இல்லை எனச் சாடி வருகின்றனர். இந்தச் சூழலில் பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்த கலவையாக உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
'கூண்டோடு மாத்திடுவேன்..' பெண்ணை அலைக்கழித்த போலீஸ்.. வாக்கி டாக்கியில் வந்து அலறவிட்ட ஆணையர் ரவி.

விஜயகாந்த் அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம், வேளாண் பொருட்களை ரூ.2.37 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம், மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அனைத்து மாநில மொழிகளில் 200 கல்வித் தொலைக்காட்சிகள், டிஜிட்டல் கரன்சி, இ பாஸ்போர்ட், வங்கி சேவைக்குள் தபால் நிலையங்கள் கொண்டுவரப்படும் உள்ளிட்ட பல முக்கிய வரவேற்கக் கூடிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

ஏமாற்றம்
அதேவேளையில் இன்றைய பொருளாதாரத்தின் நிலையை அறிந்து தனி நபரின் வருமானத்தை உயர்த்தக் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தைத் தருகிறது. தனிநபர் வருமான வரி விலக்கு தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது நடுத்தர மக்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கட்டுமான பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது, பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது போன்ற அறிவிப்புகள் இடம் பெறாதது ஏமாற்றத்தைத் தருகிறது.

வேதனை
மாவட்டம்தோறும் தொழிற்சாலைகள் அமைப்பது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது, தேசிய நதிநீர் இணைப்பது உள்ளிட்ட திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எல்ஐசி பங்கு விற்பனை, நீர்ப்பாசன திட்டங்களில் தனியார் மயம் உள்ளிட்ட அம்சங்கள் வேதனை அளிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில், மருத்துவத் துறைக்கு வரவேற்கக் கூடிய அளவுக்குப் புதிதாக எந்த அறிவிப்பும் இல்லை. 2022 2023 ஆம் நிதி ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், விவசாயமும், விவசாயிகளும் செழிக்கும் வகையில் மாவட்டம்தோறும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பது தொடர்பான அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
Recommended Video

கலவையான பட்ஜெட்
கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பான அறிவிப்பு இடம்பெறாதது கவலை அளிக்கிறது. இதேபோல் அனைத்து மக்களுக்கும் வீடு, கழிவறை, சாலை வசதி போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினாலும், அது செயல்வடிவம் பெற்றால் மட்டுமே வரவேற்க முடியும். மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications