6 +1 தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்கும் தேமுதிக… அதிர்ச்சியில் அதிமுக, குழப்பத்தில் பாஜக
Recommended Video
சென்னை:லோக் சபா தேர்தல் கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்டு தேமுதிக அடம்பிடிப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாஜக தரப்பு குழம்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான மெகா கூட்டணி அமைப்பதற்காக பாஜக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம்,புதிய நீதிக்கட்சி , பாரிவேந்தரின் ஐஜேகே கட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே அதிமுக, பாஜக கூட்டணி குறித்து மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
பிப்ரவரி 24ல் அறிவிப்பு?
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதிக்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்ய பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. கூட்டணி குறித்து இறுதி வடிவமாக.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்து கூட்டணியை இறுதி செய்வார் என்று தகவல்கள் வெளியாகின.
வருகை திடீர் ரத்து
அதற்காக... பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக இருந்தது. ஆனால்... கடைசி கட்டத்தில் அவரது வருகை திடீரென ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. கடைசி கட்டத்தில் கூட்டணிக்குள் தொகுதிகளை இறுதி செய்வதில் ஏற்பட்ட முரண்பாடே காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கூட்டணி குழப்பம்
தனிவிமானம் மூலம் சென்னை வருவதாக இருந்த அமித்ஷா.. பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி சென்று விட்டார். கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கோரியுள்ள தொகுதிகளால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேலத்துக்காக பிடிவாதம்
குறிப்பாக... சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பெறுவதில் தேமுதிக, பாமக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பாமகவை அதிமுக சமாதானம் செய்துவிட்டதாக கூறப்படும் அதே நேரத்தில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை கண்டு பாஜகவுக்கு மயக்கம் வராத குறைதான்.
தேமுதிக சொல்லும் காரணம்
அதற்கு தேமுதிக சொல்லும் காரணம்... 4 மாதங்களுக்கு முன்பாகவே தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டோம்... எனவே கவுரவமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக முரண்டு பிடித்து வருகிறதாம்.
சிக்கல் தரும் சேலம்
சேலம் தொகுதியை விட்டு கொடுக்க முடியாது என்று பாமகவும் மல்லுக்கட்டுவதால் பாஜக என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறதாம். முதல்வரின் சொந்த மாவட்டம் என்று அதிமுக கூறி வருவதால் அந்த தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல எழுந்துள்ளது.
வாக்கு வங்கி விவரங்கள்
ஏனெனில் வட மாவட்டங்களிலும் இவ்விரு கட்சிகளும் தமக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும், கடந்தகால வாக்கு வங்கி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு கூட்டணியை பேசி வருவதால் இழுபறி என்று தகவல்கள் வருகின்றன.
6 தொகுதிகள் வேண்டும்
அதே நேரத்தில் பாமக கேட்பது போன்று 6 தொகுதிகள், அதனுடன் ஒரு ராஜ்யசபா எம்பி தொகுதி(இது சுதிஷ்க்கு என்று கூறப்படுகிறது) தர வேண்டும் என்று தேமுதிக கேட்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறி வருகின்றன. மேலும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் இல்லை என்றும், 3 லோக்சபா தொகுதிகள் என்று ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெருக்கடியால் அதிருப்தி
தேமுதிகவின் சேலம் தொகுதி, 6 தொகுதிகள் வேண்டும் என்ற நெருக்கடியால்... அதிமுக, பாஜகவும் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால்... தொகுதிகள் ஒதுக்கீடில் தேமுதிக மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.