பிரேமலதா அல்லது சுதீஷுக்கு ராஜ்யசபா சீட்... பிடிவாதம் பிடிக்கும் தேமுதிக- பிடிகொடுக்காத அதிமுக
சென்னை: சட்டசபை தேர்தல் தொகுதி பேரத்தை முன்வைத்து பிரேமலதா விஜயகாந்த் அல்லது சுதீஷுக்கு எப்படியாவது ராஜ்யசபா சீட்டை அதிமுகவிடம் உறுதி செய்வது என தேமுதிக தீவிரமாக முயற்சிக்கிறதாம். ஆனால் அதிமுகவோ இந்த கோரிக்கையை எடுத்த எடுப்பிலேயே திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாம்.
சட்டசபை தேர்தல் களைகட்டும் போதே தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் அவரது மகன் விஜயபிரபாகரனும் 41 சீட் தந்தால்தான் கூட்டணி என அடம்பிடித்தனர். பின்னர் நாங்கள் கூட்டணி வைத்ததால்தான் மத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சிக்கே வந்தது என அடித்துவிட்டனர்.

ஒருகட்டத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளில் யார் 41 சீட் கொடுத்தாலும் கூட்டணி என பேசினார் விஜயபிரபாகரன். தேமுதிகவின் இந்த வெளிப்படையான 41 சீட் பேரத்தை அதிமுக ரசிக்கவில்லை. திமுகவோ கண்டுகொள்ளவே இல்லை. இதனால் சரி..சரி.. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சையாவது தொடங்குங்க என கெஞ்ச தொடங்கியது தேமுதிக.
தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருந்த தேமுதிக ஒவ்வொரு தேர்தலிலும் சீட்டுகளுக்காக அதிமுக, திமுகவிடம் பரிதாபமாக தொங்கிக் கொண்டிருக்கிற அவலநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதிமுகவைப் பொறுத்தவரையில் பாமக, பாஜக, தமாகா கூட்டணியை உறுதி செய்ததைப் போல தேமுதிகவுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.
பாமகவுக்கு எத்தனை சீட்டோ அதே இடங்கள் தங்களுக்கும் வேண்டும் என்பது தேமுதிகவின் முதல் கோரிக்கையாம்.. அதேபோல் பாமக, தமாகாவுக்கு எப்படி ராஜ்யசபா சீட்டுகள் கொடுத்தீர்களோ அதே போல் எங்களுக்கும் 1 ராஜ்யசபா சீட் தேவை என்பது 2-வது நிபந்தனையாம். தேர்தலில் போட்டியிட்டு வெல்லப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்டதால் சுதீஷ் அல்லது பிரேமலதா ஆகியோரில் ஒருவர் எப்படியாவது ராஜ்யசபா சீட் மூலம் பதவியை பெறலாம் என கனவு காண்கின்றனராம்.
கடந்த காலங்களைப் போல தேமுதிகவுக்கு என கணிசமான வாக்கு வங்கி இப்போது இல்லை என்பது நிதர்சனம். அதுவும் விஜயகாந்த், தீவிர அரசியலில் இருந்து உடல்நலக் குறைவால் ஒதுங்கி இருக்கிறார். பிரேமலதா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களது தடாலடியை தாங்க முடியாமல் தலைதெறிக்க தேமுதிகவை விட்டு ஓடுகிறவர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.
இதனால்தான் தேமுதிகவை அலட்சியமாக பார்க்கிறதாம் அதிமுக. இந்த காரணத்தை முன்வைத்தே ராஜ்யசபா சீட் எல்லாம் தர முடியாது; லோக்சபா தேர்தலைப் போல கொடுக்கிற இடங்களை, தொகுதிகளை வாங்கிக் கொண்டு போட்டியிட வழியைப் பாருங்கள் என சொல்லி அனுப்பி இருக்கிறதாம் அதிமுக தரப்பு. ராஜ்யசபா பதவிக்காக காலந்தோறும் இலவு காத்தே கிடப்பதா? என விரக்தியில் இருக்கிறதாம் தேமுதிக தலைமை.












Click it and Unblock the Notifications