அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் தேமுதிக...? விஜயகாந்த் விமர்சனத்தால் பரபரப்பு
சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவை திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ள நிலையில் தேமுதிக மட்டும் அதனை விமர்சித்து வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளும் ஒரு நிலைப்பாடு கூடாது என்றும், கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எனவும் அரசை விமர்சித்து நேற்று முன் தினம் விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.
இதன் மூலம் அதிமுக-தேமுதிக இடையே உள்ள உரசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதோடு வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடருமா என கேள்வியையும் எழ வைத்துள்ளது.
4 மாதங்களில் 3வது எம்எல்ஏ மரணம்.. சட்டசபையில் திமுக பலம் 97ஆக குறைந்தது
அதிமுக கூட்டணி
அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நடைபெற்று வருகிறது. ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுக்குள் முரண்பாடு ஏற்படக் காரணம் ராஜ்யசபா சீட். கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் காலியான 6 ராஜ்யசபா சீட் பதவிகளுக்கு திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட் எதிர்பார்த்ததோடு அது தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸிடம் கோரிக்கையும் வைத்தது.
தேமுதிக வெறுப்பு
ஆனால், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதில் அதிமுக தலைவர்களுக்கு விருப்பமில்லை. இதனிடையே ஜி.கே.வாசனுக்கு அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது முதல் கொந்தளிக்க தொடங்கியது தேமுதிக முகாம். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், திடீரென 10-ம் வகுப்பு தேர்வு விவகாரத்தை மையமாக வைத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார் விஜயகாந்த்.
கண் கெட்ட பிறகு
அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், நாளும் ஒரு நிலைப்பாடு கூடாது எனவும் தொடங்கி கடுமையான வார்த்தைகளால் அரசின் நடவடிக்கைகளை சாடியிருக்கிறார் விஜயகாந்த். இது கூட்டணியில் அந்த இரு கட்சிகளுக்குள் சுமூக உறவு இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் தேமுதிக தலைமை கூட்டணி விவகாரத்தில் புதிய முடிவு எடுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஓராண்டு
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இப்போதே அது தொடர்பான ஆலோசனைகள், பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போல் இறுதி நேரம் வரை கூட்டணி விவகாரத்தில் தடுமாறாமல் இந்த முறை முன் கூட்டியே முடிவெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் எல்.கே.சுதீஷ். ஆகையால் கொரோனா பதற்றம் தணிந்த பிறகு தமிழக அரசியலில் கூட்டணி பதற்றம் தொற்றிக்கொள்ள உள்ளது.