விஜயகாந்துக்கு ஜானகி கொடுத்த எம்ஜிஆர் "கோட்.." அதிமுகவினருக்கு புதிர் போட்ட தேமுதிக பிரேமலதா
சென்னை: முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துரை வழங்கி பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜானகியுடனான தனது பழைய நினைவுகளை பகிர்ந்து பேசினார். அப்போது, விஜயகாந்திற்கு எம்.ஜி.ஆர் சினிமா படத்தில் நடித்த கோட் ஒன்றையும் ஜானகி பரிசாக அளித்ததாக பேசினார். அந்த கோட்டை எம்.ஜி.ஆர் எந்த படத்தில் அணிந்து நடித்தார் என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று அதிமுக தொண்டர்களுக்கு புதிர் ஒன்றையும் விடுத்தார்.
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெற்றது. இந்த விழாவில், ஜானகியுடன் திரைத்துறையில் பயணித்த ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு ஜெயசித்ரா, குட்டி பத்மினி ஆகியோரை எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஜானகி ராமச்சந்திரன் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பேசிய வீடியோ விழாவில் ஒளிபரப்பப்பட்டது. அந்த வகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் அவருடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார். அப்போது அதிமுக தொண்டர்களுக்கு புதிர் ஒன்றையும் அறிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:- ஜானகி நூற்றாண்டு விழாவில் சிறப்பாக நடக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜானகி அம்மையாருக்கும் எனக்கும் விஜயகாந்திற்கும் உள்ள உறவு ஆழமானது. ஒவ்வொரு முறையும் விஜயகாந்த் பிறந்த நாளன்று ராமாவரம் தோட்டத்திற்கு நாங்கள் போவோம். அங்கே ஜானகி அம்மையாரிடம் ஆசிர்வாதம் வாங்குவோம்.
விஜயகாந்த் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வருவதை ஒரு வழக்கமாக வைத்து இருந்தார். எம்.ஜி.ஆர் நியாபகமாக எதாவது ஒரு பொருளை கொடுக்க வேண்டும் என்று ஜானகியிடம் விஜயகாந்த் கேட்ட போது, கோட் ஒன்றை ஜானகி கொடுத்தார். இந்த கோட்டை, எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் அணிந்து நடித்து இருப்பார். எம்.ஜி.ஆர் நியாபமாக விஜயகாந்திடம் இந்த கோட்டை ஜானகி கொடுத்தார்.
அதேபோல, எம்.ஜி.ஆர் அணிந்த ஆடைகளையும் விஜயகாந்திடம் கொடுத்து நியாபமாக வைத்துக்கொள் என்று சொன்னார். நான் அதிமுக தொண்டர்கள் கிட்ட ஒரு விஷயத்தை கேட்டுக்கொள்கிறேன். நான் கையில் வைத்து இருக்கும் கோட்டை, எம்.ஜி.ஆர் எந்த படத்தில் பயன்படுத்தினார் என்று எனக்கு நீங்க தெரியப்படுத்த வேண்டும் என்று அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

எம்.ஜி.ஆர் நியாபகமாக எதாவது வேண்டும் என்று கேட்டீயே.. என ஜானகி கேட்ட போது, எம்.ஜி.ஆரின் பிரசார வாகனம் எனக்கு கொடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டார். தாராளமாக நீ எடுத்துக்கோ.. இங்கே சும்மாதான் வச்சிருக்கோம் என சொல்லி ஜானகி அம்மையார் அன்பு பரிசாக பிரசார வேனை கொடுத்தார். அந்த பிரசார வாகனத்தை இன்றளவும் பொக்கிஷம் மாதிரி பாதுகாத்துக்கொண்டு இருக்கிறோம்.
ஜானகி மரணம் அடைந்த செய்தி கேட்டதும் தனது ஷூட்டிங் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ராமாவரம் தோட்டத்திற்கு சென்று மகன் போல உடல் அடக்கம் செய்யும் வரை அங்கேயே தான் இருந்தார்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். பிரேமலதா விஜயகாந்த் காட்டிய கோட்டினை எம்ஜிஆர் எந்த படத்தில் பயன்படுத்தினார் என்று தெரியுமா?.. தெரிந்தால் அது என்ன படம் என்று இங்கே கமெண்ட் செய்யுங்கள்..












Click it and Unblock the Notifications