திடீரென மயங்கி விழுந்த விஜயகாந்த மகன் சண்முக பாண்டியன்.. உடல் நிலை தற்போது எப்படி உள்ளது?
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரது நினைவிடத்தில் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது திடீரென சண்முக பாண்டியன் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முக பாண்டியன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை முதலே ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வந்தனர்.

விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை வறுமை ஒழிப்புத் தினமாக அவரது கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அது போல் அவருடைய பிறந்தநாளில் எம்ஜிஆர் ஜானகி காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளையும் உணவையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கி வந்தார். அந்த வகையில் நேற்றும் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.
தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு காலை முதலே கட்சியினர் திரண்டு வண்ணமலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வந்தனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் அவருடைய ஆள் உயர சிலை திறக்கப்பட்டது. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க, விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார்.
அப்போது தொண்டர்கள் கூட்டம் அங்கு அதிக அளவில் இருந்தது. தந்தையை நினைத்து கண்கலங்கிய படி இளைய மகன் சண்முக பாண்டியன் நின்றார். விஜயகாந்தின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தேமுதிக தொண்டர்கள் சண்முக பாண்டியனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது.
அப்போது சண்முகபாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவசர அவசரமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சண்முக பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சண்முக பாண்டியன் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications