கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் விஜயகாந்த் -கைகூப்பி வணங்கி வாக்கு சேகரித்தார்
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டியில்
தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையிலும், திருத்தணி சட்டசபைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்தும் கைகூப்பி வணங்கி வாக்கு சேகரித்தார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவர் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா போட்டியிடுகிறார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரேமதலா விஜயகாந்த், தன்னால் விருத்தாசலம் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள இயலாது என்று கூறியிருந்தார்.

தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் கட்சி தலைவர் விஜயகாந்த் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுதீஷ் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தமிழகத்தின் ஈசான்ய மூலையாக கருதப்படும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையில் பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரசார வேனில் ஏறி நின்று வாக்காளர்களை நோக்கி கைகூப்பி வணங்கியும், கைகளை அசைத்தும் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார்.
திருத்தணி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பொதட்டூர்பேட்டையிலும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். ஐந்து நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ள விஜயகாந்த், சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விஜயகாந்தின் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications