எட்டி எட்டி கையை அசைத்த விஜயகாந்த்.. ரூபாய் நோட்டுடன் நின்ற பிரேமலதா.. துள்ளி குதித்த தொண்டர்கள்
விஜயகாந்த் தன்னுடைய தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னார்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த்துக்கு உடல்நலம் குன்றி உள்ளது.. இதற்காக வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒவ்வொரு வருடமும் ஆங்கிலப் புத்தாண்டன்று தொண்டர்களை சந்திப்பது விஜயகாந்த்தின் வழக்கம்.. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காரணத்தினாலும், உடல்நிலை கரணங்களாலும், தொண்டர்களை அவரால் சந்திக்க முடியவில்லை.
வாழ்த்து
இந்நிலையில் புத்தாண்டான இன்று விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது.. இதனால், காலை 7 மணி முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சித் தலைமையகத்தில் குவிய ஆரம்பித்தனர்.. சரியாக, நண்பகல் 11.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் விஜயகாந்த்..
பிரேமலதா
வழக்கம்போல் வெள்ளை வேட்டி சட்டை, நெற்றியில் விபூதியுடன் பளிச்சென காணப்பட்டார்.. மாஸ்க் அணிந்திருந்தார்.. ஆனாலும் கூலிங்கிளாஸை விடவில்லை.. பார்ப்பதற்கு இளமையாகவும், சற்று உடல்நலம் தேறியவாறும் காணப்பட்டார்.. அவருடன் பிரேமலதா விஜயகாந்த், மகன்விஜய பிரபாகரன், மற்றும் முக்கி பிரமுகர்கள் வந்திருந்தனர்.. காரில் வருகை வந்தார் விஜயகாந்த்.. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்தை நேரில் சந்திக்க தொண்டர்கள் ஆர்வம் காட்டினர்.. விஜயகாந்த்தும், தன்னுடைய தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து, அவர்களை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்தார்..
விஜயகாந்த்
பிறகு கட்சி அலுவலகத்திற்குள் சென்ற விஜயகாந்த், அங்கும் தொண்டர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. ஒரு இருக்கையில் விஜயகாந்த் உட்கார வைக்கப்பட்டதும், தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவராக விஜயகாந்த்தை பார்த்து வணக்கம் சொல்லி, வாழ்த்து கூறினார்கள்.. அவர்களை பார்த்து விஜயகாந்த்தும் பதிலுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்..
ரூபாய் நோட்டுகள்
பக்கத்திலேயே பிரேமலதா விஜயகாந்த் நின்று கொண்டு, வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்து சொல்லி, அனைவருக்கும் கையில் ரூபாய் நோட்டுகளை புத்தாண்டு பரிசாக அளித்தார்.. தொண்டர்களுடன் சேர்ந்து போட்டோக்களையும் எடுத்து கொண்டார்.. விஜயகாந்த் தன்னுடைய இருக்கையில் இருந்தே எட்டி எட்டி பார்த்து தொண்டர்களிடம் கையை அசைத்தது, தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.