விஜயகாந்த் வீட்டுக்கு நள்ளிரவில் வந்து தொல்லை கொடுக்கும் நபர்கள்.. பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு!
சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து சிலர் தொந்தரவு செய்வதாக அப்பகுதி தேமுதிக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் தீவுத் திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டனர்.

விஜயகாந்த் மறைவுக்கு கட்சியினரை காட்டிலும் அவருடைய அபிமானிகள், மற்ற கட்சியினர்தான் அதிகம் வந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் நெரிசலுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். விஜயகாந்த்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வர முடியாதவர்கள் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் வீட்டு வாசலில் வந்து சிலர் கூச்சலிடுவதாகவும், தொந்தரவு செய்வதாகவும் தேமுதிக விருகம்பாக்கம் பகுதி செயலாளர் லட்சுமணன் புகார் அளித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் தினமும் வந்து 'விஜயகாந்த் எங்கே?' என்று கேட்டு பிரச்சனை செய்து வருவதாகவும், எனவே வீட்டில் இருப்பவர்கள் தொந்தரவுக்கு உள்ளாவதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications