ஆட்சியில் பங்கு- நடிகர் விஜய் பேச்சுக்கு விஜயகாந்த் மகன் தேமுதிக விஜய பிரபாகரன் ஆதரவு!
சென்னை: ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசியிருப்பதற்கு தேமுதிகவின் விஜய பிரபாகரன் வரவேற்றுள்ளார். நடிகர் விஜய் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முழு ஆதரவு தெரிவித்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவும் தற்போது வரவேற்பு தெரிவித்திருக்கிறது.
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் நான் முதல் முறையாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் விஜயகாந்துடன் வந்துள்ளேன். தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கு இணங்க நான் வந்துள்ளேன்.

விருதுநகர் லோக்சபா தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட போது ஒவ்வொரு ஊரிலும் முத்துராமலிங்க தேவரை வணங்கிவிட்டுதான் பிரசாரம் செய்தேன். இன்று அவரது பிறந்த நாள், இறந்த நாளில் தரிசிக்க வந்தது நிறைவாக இருக்கிறது.
நீண்டநாள் போராட்டத்துக்கு பின் நடிகர் விஜய் மாநாடு நடத்தி உள்ளார். அதற்கு என் வாழ்த்துகள். தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடைபெறும் போது எங்களுடைய நினைவுகளை சுட்டிக்காட்டுவதும் வழக்கம். அதுபோலதான் விஜய் மாநாட்டின் போது தேமுதிகவின் முதல் மாநாடு தொடர்பான வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டது.
நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்தவன். அண்ணன் நடிகர் விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் ஒரு மாநாட்டைத்தான் நடத்தி முடித்துள்ளார். இவ்வாறு விஜய பிரபாகரன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பசும் பொன்னில் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், அதிகாரத்தில் உள்ள கட்சியானது அனைவருக்கும் சரி சமமாக பகிர்ந்து தர வேண்டும். அதிகாரப் பகிர்வை அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன. நாங்களும் அதைப் பற்றி பேசுகிறோம் என்றார்.
தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய கருத்துகளை முழுமையாக வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications