தனித்துப் போட்டி சரி! தேமுதிக எத்தனை இடங்களில் வெல்லும்? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்!
தஞ்சை:: தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று அதை வைத்து அரசியல் செய்வதாக விமர்சித்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேமுதிக நிர்வாகி இல்ல மண விழாவை நடத்தி வைக்க வருகை தந்த அவர் இதனைக் கூறினார்.

திருமண விழா
கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது என்றும் அதிகார பலம், பண பலத்தை எதிர்த்து தேமுதிக களத்தில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரேமலதா நம்பிக்கை
மேலும், விஜயகாந்திற்கும் தேமுதிக வேட்பாளர்களுக்கும் மக்கள் உரிய அங்கீகாரத்தை வழங்குவார்கள் என நம்புவதாகவும் கூறினார். ஆளும் கட்சியின் செயல்பாடுகளை பொறுத்தவரை, தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் தராதது, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் கொடுக்காதது என மக்களிடம் மிகப் பெரிய மனக்குறை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நீட் அரசியல்
மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது என்பது காலம் காலமாக குற்றஞ்சாட்டப்படும் ஒன்று என்றும் மழை வெள்ள பாதிப்பின் போது மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை முழுமையாக கொடுக்கவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். நீட் தேர்வை நீக்குவோம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, இன்று அதைவைத்து அரசியல் செய்வதாக வேதனை தெரிவித்தார்.

வெற்றி வாய்ப்பு
இதனிடையே தேமுதிக எத்தனை இடங்களில் வெல்லும் என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் முடிவன்று தான் இதற்கு விடை தெரியும் என சிம்பிளாக கூறினாரே தவிர, உறுதியாக இத்தனை நகராட்சிகள், மாநகராட்சிகளில் நாங்கள் வெல்வோம் என அவர் கூறவில்லை. தங்கள் கட்சியின் வெற்றிவாய்ப்பு குறித்து தலைமை பொறுப்பில் இருக்கும் அவரே தயங்கிய நிலையில் பதிலளித்தது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications