ரஜினி மீது அன்புமழை பொழியும் தேமுதிக... அரசியல் மாற்றம் உறுதி என பிரேமலதா பேச்சு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவர் மீது தேமுதிக மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினியை இன்று இவ்வளவு தூரம் புகழும் பிரேமலதா விஜயகாந்த் இதற்கு முன்பு பல நேரங்களில் அவரை பற்றி பேச்சை எடுத்தாலே செய்தியாளர்கள் மீது சிடுசிடுவென எரிந்து விழுந்திருக்கிறார்.
ரஜினி முதல்வர் வேட்பாளர் பந்தயத்தில் இருந்து ஒதுங்குவதாக நேற்று அறிவித்ததும் அவரை போற்றி புகழ்ந்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
ரஜினி மன்ற நிர்வாகிகளை இழுக்க... டிடிவி தினகரன் புது அசைன்மெண்ட்
பிரேமலதா பேச்சு
சென்னை பூந்தமல்லியில் இன்று நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரும் 2021-ம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழும் என கூறினார். மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் நல்ல முடிவுகள் வெளியாகும் என்றும் மாற்றம் நிகழ்வது உறுதி எனவும் அதிமுகவை சூசகமாக விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். அதிமுக ராஜ்யசபா சீட் கொடுக்காத நிலையில், அக்கட்சியை பற்றி என்ன பேசுவார் என செய்தியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் பிரேமலதா பொறுமைகாத்தது குறிப்பிடத்தக்கது.
மரியாதை
நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவர் மீது தங்கள் குடும்பமும், தேமுதிகவும் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இது தான் மாற்று அரசியலுக்கு சரியான நேரம் என ரஜினி கூறியதை சுட்டிக்காட்டிய அவர், 2021- ல் அரசியல் மாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விவகாரம் என்னவென்றால், எப்போதும் ரஜினியை பற்றி விமர்சிக்கும் வகையில் கருத்து கூறி வந்த பிரேமலதா இன்று புகழ்ந்து பேசியது தான்.
திடீர் கரிசனம்
ரஜினி அரசியல் கட்சி தொடங்கி முதல்வர் வேட்பாளராக களமிறங்கினால் அது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்தது தேமுதிக தலைமை. இதனிடையே நேற்று ரஜினி தனது நிலைப்பாட்டை அறிவித்ததை அடுத்து அவரை நல்ல மனிதர் என இன்று பேசியிருக்கிறார் பிரேமலதா. இதே பிரேமலதா விஜயகாந்த், சில நாட்களுக்கு முன்புவரை ரஜினி முதலில் களத்திற்கு வரவேண்டும், மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும், என்றெல்லாம் பலமுறை தெரிவித்திருக்கிறார். மேலும், ரஜினியும் கமலும் இணைந்து நடிகர் சங்கத் தேர்தலை கூட சந்தித்ததில்லை என அண்மையில் கூட விஜயபிரபாகரன் விமர்சித்திருந்தார்.
புதிய கூட்டணி
தற்போதைய சூழலில் திமுக மீதும், அதிமுக மீதும் தேமுதிக மிகுந்த அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளது. இதனால் அந்த இரு கட்சிகளுடன் இணைந்து தேமுதிக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்பது சந்தேகம் தான். இதனால் ரஜினியுடன் கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க விரும்புகிறது தேமுதிக. அதற்கான முன்னோட்டமாக தான் அரசியல் மாற்றம், ரஜினி நல்லவர் என்றெல்லாம் பிரேமலதா பேசியதை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.