தவெகவுடன் புறவாசல் வழியாக கூட்டணி பேச்சா.. காங்கிரஸ் கட்சி அப்படி செய்யாது.. செல்வப்பெருந்தகை!
சென்னை: தவெகவிடம் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தவெகவிடம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டணி பேச சொல்லி தேசிய தலைமை என்னிடம் எந்த வழிகாட்டுதலும் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. திமுக தலைமை தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தரப்பில் 34 தொகுதிகள் வரை கேட்கப்பட்டுள்ளன. ஆனால் திமுக தரப்பில் 25 தொகுதிகள் மட்டுமே கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அதேபோல் ஒரு ராஜ்ய சபா சீட்டும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுப்பதாக திமுக தலைமை தெரிவித்திருக்கிறது. இருப்பினும் திமுக - காங்கிரஸ் இடையில் சுமூக உறவு இல்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு கூறிய பிறந்தநாள் வாழ்த்திலும் கூட ராகுல் காந்தி சகோதரர் என்று குறிப்பிடவில்லை. அதேபோல் ஸ்டாலினை ராகுல் காந்தியும் சகோதரர் என்று பதில் அளிக்கவில்லை.
மார்ச் 5ஆம் தேதியுடன் ராஜ்ய சபா தேர்தலுக்கான மனுத்தாக்கல் நிறைவடைய உள்ளது. இதனால் இன்னும் 3 நாட்களில் திமுக - காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான கூட்டணி தொடருமா என்பது தெரிய வந்துவிடும். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் பேச்சுவார்த்தை என்பது நடக்கும். அனைத்து கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்பார்கள். பின்னர் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்படும்.. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் முடிவு எடுக்கப்படும். இந்தியா கூட்டணி என்பது கொள்கை சார்ந்து அமைந்த இயற்கையான கூட்டணி.
எங்களுக்கு தேவையானதை கேட்போம். முதல்வர் ஸ்டாலின் அதனை நிச்சயம் பரிசீலிப்பார். தவெகவிடம் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேசவில்லை. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நான்தான். தவெகவிடம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டணி பேச சொல்லி தேசியத் தலைமை என்னிடம் எந்த வழிகாட்டுதலும் தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications