திமுக கூட்டணியில் இவங்க 4 பேருக்குதான் ராஜ்யசபா எம்.பி. பதவி? ஓரிருநாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: திமுக கூட்டணியில் யார் யாருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கும் ஒரு சீட் கொடுக்கப்படுகிறதாம்.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 ராஜ்யசபா எம்.பி. பதவி காலி இடங்களுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் மொத்தம் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் காலியாகின்றன.
திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஷ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
57 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி தேர்தல் தேதி அறிவிப்பு.. முன்கூட்டியே தேர்தல் ஏன் தெரியுமா?
திமுக-4; அதிமுக-2
ராஜ்யசபா எம்.பி.க்களை சட்டசபை எம்.எல்.ஏக்கள்தான் தேர்வு செய்வர். தமிழக சட்டசபையில் தற்போதைய எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 4 எம்.பிக்கள்; அதிமுகவுக்கு 2எம்.பிக்கள் உறுதியாகி உள்ளன. இந்த 6 எம்.பி.இடங்களுக்கு திமுக, அதிமுகவில் பலத்த போட்டி நிலவுகிறது.
மூவரில் யாருக்கு?
திமுகவில் தற்போது பதவி முடிவடையும் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஷ்குமார் ஆகிய மூவருமே மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காய்களை நகர்த்துகின்றனர். ஆனால் இந்த மூவரில் ராஜேஷ்குமாருக்குதான் மறுவாய்ப்பு உறுதி என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
இந்த 2 பேருக்கு கன்பார்ம்?
இதேபோல் கடந்த ராஜ்யசபா தேர்தலின் போதே கார்த்திகேய சிவசேனாபதி பெயர் அடிபட்டது. கோவை மண்டலத்தை கணக்கில் வைத்து அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை திமுக தலைமை கொடுக்கக் கூடும் என கை நீட்டுகின்றனர். பொதுவாக திமுகவின் சீனியர் ஒருவருக்கு ராஜ்யசபா பதவி கொடுக்கப்படுவது வழக்கம். இந்த பட்டியலில் மதுரை பொன்.முத்துராமலிங்கத்தின் பெயர் பலமாக பேசுபொருளாகி இருக்கிறது. ஆக ராஜேஷ்குமார், பொன்.முத்துராமலிங்கம், கார்த்திகேய சேனாபதி ஆகியோருக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
காங்கிரஸுக்கு 1 சீட்?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எப்படியாவது ஒரு சீட் பெறுவதில் உறுதியாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யான மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதவி காலமும் இப்போது முடிவடைகிறது. அதனால் ப.சிதம்பரத்துக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் கட்சித் தலைவர் பதவி எப்படியும் போகப் போகிறது... முடிந்த அளவு முட்டி மோதி ராஜ்யசபாவுக்கு போய்விடலாம் என போராடுகிறார் தமிழக காங். கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி. ஆக காங்கிரஸில் ப.சிதம்பரம் அல்லது கே.எஸ்.அழகிரி இருவரில் ஒருவருக்கு சீட் கன்பார்மாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.