காங்கிரஸை விடுங்க.. 2 கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த ஸ்டாலின்.. திமுக கறார்
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி திமுக பலமான கூட்டணி அமைத்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக தலைமை அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் தனது கூட்டணியை தொடர்ந்து பலமாக்கி வருகிறார். அந்த வகையில் கூட்டணிக்குள் புதிய கட்சிகளை கொண்டு வந்துள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், பிரேமலதாவின் தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் திமுகவில் இணைந்துள்ளார். இதுதவிர தனி அணியாக செயல்பட்டு வரும் ராமதாஸையும் கூட்டணிக்குள் கொண்டு வர திமுக காய் நகர்த்தி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. அதன்படி ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்ட்கள், மதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளன. ஆனால் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த முறையை போல் சீட் வழங்கவும், சில கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மல்லுக்கட்டி வருகிறது. காங்கிரஸ் 39 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கேட்கிறது. ஆனால் திமுகவோ கடந்த முறையை போல் 25 சீட், ஒரு ராஜ்யசபா மட்டும் தான் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நிலவி வருகிறது. இப்படியான சூழலில் தான் திமுக சார்பில் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது நேற்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தினர். கடந்த முறை திமுக கூட்டணியில் இரு கட்சிகளும் தலா 6 இடங்களில் போட்டியிட்டன. இதனால் இந்த முறை கூடுதல் இடங்களை இருகட்சிகளும் கேட்டன. ஆனால் அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை.
மாறாக இந்த முறை கூடுதல் சீட் ஒதுக்க முடியாது. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் அந்த கட்சிகளுக்கு சீட் ஒதுக்க வேண்டும். இதனால் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 6 சீட்டுகளில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது 2 சீட்டுகளை குறைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு தெரிவித்துள்ளது. இதனால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளன.












Click it and Unblock the Notifications