திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்கும் மமக.. சொந்த சின்னத்தில் போட்டியா? ஜவாஹிருல்லா சொன்ன வார்த்தை!
சென்னை: மனிதநேய மக்கள் கட்சிக்கு குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கேட்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். எங்கள் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்கு எது உதவுமோ, அந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் சுமார் 12 முதல் 15 சதவிகிதம் வரை உள்ளது. அதில் ராமநாதபுரம், வேலூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளனர். சில தொகுதிகளில் இஸ்லாமியர்களின் வாக்குகள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானித்து வருகிறது. இந்த முறை திருப்பரங்குன்றம் விவகாரம் மிகப்பெரிய சம்பவமாக உருவெடுத்துள்ளது.

இஸ்லாமியர்கள் வாக்கு
இந்த சம்பவத்திற்கு பின் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக பக்கம் முழுமையாக சாய்வதாக தெரிய வந்துள்ளது. லோக்சபா தேர்தலின் போது எஸ்டிபிஐ அதிமுக பக்கம் நின்றது. ஆனால் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், எஸ்டிபிஐ திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளது.
ஒற்றை அணியில் இஸ்லாமிய கட்சிகள்
தற்போது தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது. இதனால் இஸ்லாமியர்களின் ஆதரவை மொத்தமாக கைப்பற்றும் முனைப்பில் திமுக பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் இந்த முறை யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜவாஹிருல்லா பேட்டி
இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் பாபநாசம், மணப்பாறை ஆகிய இரு தொகுதிகளும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டன. எங்களின் விருப்பப் பட்டியலில் இந்த இரு தொகுதிகளும் இல்லையென்றாலும், நாங்கள் அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம்.
தனிச்சின்னத்தில் போட்டியா?
இந்த முறை எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்போம். குறைந்தது 5 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம். அதேபோல் நாங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளோம்.. தோல்வியும் அடைந்துள்ளோம். எங்களை பொறுத்தவரை வேட்பாளர்களின் வெற்றிக்கு எது உதவுமோ, அந்த வாய்ப்பையே நாங்கள் எடுப்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications