பழைய பாசம் போல.. வக்பு மசோதா மீதான வாக்கெடுப்பில் திமுக கூட்டணி கட்சி எம்பி மட்டும் 'ஆப்சென்ட்'?
சென்னை: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் தமிழ்நாட்டின் 39 எம்.பிக்களும் எதிர்த்து வாக்களித்ததாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லி தகவல்களோ, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சியின் எம்பி ஒருவர், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்கின்றன.
நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திமுக தொடக்கம் முதலே மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும் திமுக ஆணித்தரமான எதிர்ப்பை பதிவு செய்தது.

லோக்சபாவில் வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்த போதும் திமுக எம்பிக்கள் மிக கடுமையான குரலில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். லோக்சபாவில் வக்பு மசோதா நிறைவேறிய பின்னர் தமிழ்நாடு சட்டசபைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். தமிழக சட்டசபை வளாகத்திலும் திமுக எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் ராஜ்யசபாவிலும் திமுக கடுமையாக எதிர்த்தது. இந்த எதிர்ப்புக்கு இடையே ராஜ்யசபாவில் வக்பு வாரிய மசோதா நிறைவேறி உள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்தான், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் எம்பி மட்டும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்கின்றன டெல்லி தகவல்கள். வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட நாளில் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்ட அந்த எம்பி, வாக்கெடுப்பில் ஓட்டுப் போடவில்லையாம்.
அதேபோல, வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியதற்கு எதிராக, அனைத்து திமுக கூட்டணி எம்பிக்களும் கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் சென்றனர்; ஆனால் அந்த கூட்டணி எம்பி மட்டும் கறுப்பு உடை அணிய மறுத்தாராம்.
திமுக கூட்டணியில் தற்போது உள்ள அந்த கட்சி, ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்ததாம். இதனால் பழைய பாசத்தில் அல்லது மீண்டும் அதே கூட்டணிக்கு திரும்பும் முடிவில்தான் இந்த நிலைப்பாட்டை அந்த கூட்டணி கட்சி எடுத்திருக்கலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications