அடுத்த பிறந்த நாளில் அமைச்சர்! நாளைய திமுக தலைவர் ‘உதயநிதி ஸ்டாலின்’!ஆரூடம் சொல்லும் அன்பில் மகேஷ்
சென்னை : இன்றைய இளைஞரணி செயலாளரை நாளைய திமுக தலைவர் ஆக்குவதற்கு தட்டியம் ( அடித்தளம்) போடுகிற நிகழ்வாக தான் இன்று உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் அவரது ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை தண்டையார்பேட்டையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி," இளைஞரணி நிகழ்ச்சி என்றாலே அதில் ஒரு எழுச்சி என்றும் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இன்று நடக்கிறது என்றாலும் இந்த நிகழ்ச்சி நடப்பதை கேட்டு உதயநிதி நெகிழ்ந்தார். திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு இளைஞரணி தான். இன்றைய இளைஞரணி செயலாளர் நாளை கழக(திமுக) தலைவராக வருவதற்கு தட்டியம் (அடிதளம்) போடுகின்ற நிகழ்வாக தான் இன்று தமிழ்நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது

சின்னவர்
சின்னவருக்கு வெடி வைத்தால் புடிக்காது..எனக்கு சிறியதாக உதவிகள் செய்தாலும் மக்களுக்கு பயன்படுகிற வகையில் செய்ய வேண்டும் என கூறி இருக்கிறார் உதயநிதி. இளைஞரணி செயலாளராக எளிதில் உதயநிதி வரவில்லை.. 2019 தேர்தல் வெற்றிக்கு என்னை விட தொண்டர்களும் தலைவரும் தான் காரணம் என பெருமிதத்துடன் கூறியவர் நமது சின்னவர். அவர் இன்னும் மேலும் பல உயரங்களை தொட வேண்டும். இந்த பிறந்தநாளில் அவர் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார். அடுத்த பிறந்தநாளில் அவர் அமைச்சராக இருக்க வேண்டும் என அனைவரின் ஒத்த கருத்தாக அவரை வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.

அமைச்சர் உதயநிதி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இரத்ததான முகாம்,அன்னதானம் நலத்திட்ட உதவிகள் என எதுவாக இருந்தாலும் மக்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்ற உதயநிதியின் அன்பு கட்டளையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் ஆசை
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம் அல்ல. ஒட்டு மொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசை. பொதுமக்களின் ஆசை. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தன் தொகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதை அனைத்தையும் கிட்டத்தட்ட கொடுத்து முடித்து விட்டார் உதயநிதி ஸ்டாலின். சட்டமன்ற உறுப்பினராக தொகுதிக்கு மட்டும் குறுகி விட கூடாது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுமைக்கும் மக்களுக்கு நல்லது பயக்க வேண்டும் என்று தான் எங்கள் விருபத்தை தெரிவித்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications