"கலர்" மாறுமோ.. பாஜக ரூட் ஒர்க் அவுட் ஆகுமா.. அப்டியே உ.பி பார்முலாவை களம் இறக்குமா..?
ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்துக்கு சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: ஆட்சியில் "பங்கு" என்ற கருத்தை தமிழக பாஜக முன்வைக்க தொடங்கி உள்ளது.. இதையேதான் அன்று பொன்.ராதா சொன்னார்.. இதையேதான் வானதியும் சொன்னார்.. இதையேதான் இன்று எல்.முருகனும் சொல்லி வருகிறார்.. இது சாத்தியமா?
பல கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைப்பதுதான் கூட்டணி.. அதாவது யாருக்கும் மெஜாரிட்டி இல்லாவிட்டால், அப்படிப்பட்ட சூழலில் இந்த கூட்டணி அரசு அமைந்துவிடும். பெரும்பாலும் நாடாளுமன்ற மக்களாட்சிக்கு பொருந்துமே தவிர, மாநில அரசுகளுக்கு இது பொருந்துவதில்லை.
அதிலும் நம் தமிழகத்தில் இப்படி கூட்டணி அரசுபெருமளவில் அமைவது இல்லை.. இதை அரசியல் கட்சிகளே விரும்புவதில்லையா? அல்லது மக்கள் விரும்பவில்லையா என்பது தெரியவில்லை.. அப்படித்தான் திமுக, அதிமுக அரசியல் நகர்ந்து வருகிறது.
வடமாநிலம்
ஆனால், தமிழக பாஜக ஆட்சியில் பங்கு என்ற தன்னுடைய வாதத்தை முன்வைத்து வருகிறது.. வடமாநிலங்களில் இது ஒர்க் அவுட் ஆகியிருக்குமே தவிர, இங்கு இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? பங்கு கேட்கும் பாஜகவுக்கு இப்போதைக்கு தமிழ்நாட்டில் எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.. ஒரு எம்பியும் இல்லை.. சொல்லிக் கொள்ளும்படியான வாக்கு வங்கிகளும் தமிழ்நாட்டில் இல்லை என்பதே உண்மை.. அப்படி இருந்தும், ஆட்சியில் பங்கு என்ற கருத்தை சொல்லி வருவதன் காரணம் என்ன? என்பது விளங்கவில்லை.
20 சீட்
கூட்டணியில் 20 சீட் வாங்குவதற்கே 6 மாதம் போராடிய நிலைமை ஏற்பட்டது.. இதற்கே பாஜக தலைவர்கள் பலர் சென்னைக்கு வந்து வந்து போனார்கள்.. இதுவரை வெளிவந்த கருத்து கணிப்புகளில் இந்த 20 சீட்டுகளில் ஒன்றில் கூட பாஜகவுக்கு வெற்றி முகம் இல்லை என்று சொல்லப்பட்டு வருகிறது.. அதனால் 20 சீட்டுகளில் எத்தனை இடங்களை பாஜக பெறும் என்ற எதிர்பார்ப்பு நிறையவே ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சியில் பங்கு எப்படி சாத்தியமாகும் என்பதும் நமக்கு யதார்த்த கேள்வியாக எழுகிறது.
கருணாநிதி
கூட்டணிக்கு பெருவாரியாக ஒத்துழைத்த கட்சிகள் என்றாலும் சரி, அல்லது கூட்டணி தலைமைக்கு பலமுறை வெற்றிகளை பெற்று தந்த கட்சிகளே என்றாலும் சரி, அதிமுகவும் திமுகவும், இதுவரை ஆட்சியில் பங்கு என்ற நடைமுறையை ஏற்கனவே இல்லை..
காங்கிரஸ்
உதாரணத்துக்கு, கடந்த 2006-ல் திமுக 98 தொகுதிகளில் மட்டுமே வென்று, பாமக - காங்கிரஸ் துணையுடன் ஆட்சியை 5 வருஷம் நடத்தியது.. அப்போதுகூட பாமகவையும் சரி, காங்கிரஸையும் சரி, அவர்களை கருணாநிதி அமைச்சரவையில் சேர்க்கவேயில்லை. இதை பலமுறை ஜெயலலிதாவும், எம்ஜிஆரும்கூட கையாண்டுள்ளனர்.. அதாவது, ஆட்சி ஒருவரிடம், கட்சி ஒருவரிடம் என்று இதுவரை எப்படி செயல்படவில்லையோ, அதுபோலவேதான் ஆட்சியில் பங்கு என்பதும், வரையறுக்கப்படாத நடைமுறை உள்ளது.
முதல்வர்
தற்போது, தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதிமுக ஆட்சியே தொடருவதாக இருந்தால் மட்டுமே, "பங்கு" என்ற வாதத்தை மீண்டும் பாஜக முன்வைக்க முடியும்.. அதாவது துணை முதல்வர் பதவியை கேட்பதாக தெரிகிறது.. இந்த பேச்சு இதற்கு முன்பு எழுந்தபோதே, "ஆட்சியில் பங்கு என்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள்" என்று எடப்பாடி பழனிசாமியே அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துவிட்ட போதிலும், இதே பேச்சு தொடர்வதை காண முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், உபி பார்முலாவை தமிழகத்தில் களமிறக்கவும் பாஜக தயங்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
உபி பிளான்
அன்று உபியில் பாஜக பெருவாரியாக வென்றபோதும், முதல்வர் பதவியை யாருக்கும் தராமல், எம்பியாக இருந்த யோகியை முதல்வராக்கி, இடைத்தேர்தலில் வெற்றி பெறவைத்தது பாஜக.. கிட்டத்தட்ட அதுபோலவே இங்கேயும் ஒருசூழலை பாஜக உருவாக்குமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. ஆனால், ஒருவேளை திமுக வெற்றிபெற்றால், பாஜகவின் நிலைப்பாடு என்ன ஆகும் என்றுதான் தெரியவில்லை.. ஆனால், எப்படி பார்த்தாலும் சரி, "ஆட்சியில் பங்கு" என்பது தமிழகத்துக்கு எப்போதுமே பொருந்தாத நடைமுறையாகவே இப்போது வரை பார்க்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை!