வாங்க ஒன்னு சேர்ந்து அடிப்போம்.. மக்கள் விரோத பாஜக! ஒரே நாளில் மீட்டிங்..கைகோர்த்த திமுக-அதிமுக!
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும், அதிமுக அவசர செயற்குழு கூட்டமும் நடைபெற்றிருக்கும் நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மாங்கள் கவனிக்க வைத்திருக்கிறது. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும், அதிமுகவும் சொல்லி வைத்தார் போல் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது கவனிக்க வைத்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் இன்று இரு முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையிலும் நடைபெற்றது.

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிலையில் மூத்த அமைச்சர் கேஎன் நேரு, துரைமுருகன், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும், மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், இரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்துக் கொள்வதையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகமான சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில் மூத்த தலைவர்கள் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழுவின் 9 தீர்மானங்களும், 2 சிறப்பு தீர்மானங்கள் உட்பட 11 சிறப்பு தீர்மானங்கள் என மொத்தம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதி ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவும் திமுகவும் சொல்லி வைத்தார் போல ஒரே மாதிரியாக பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததற்கு மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் பாஜகவுடன் திமுகவும் அதிமுகவும் கூட்டணியில் இருந்திருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவை திமுக தீவிரமாக எதிர்த்து வருகிறது.
அதே நேரத்தில் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அது மட்டுமல்லாமல் அண்ணாமலையின் செயல்பாடுகள் அதிமுகவினரை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி இனி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை எனவும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் ஒரே மாதிரி தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications