மோடிக்கு முன்பே முந்திக் கொண்ட ஸ்டாலின்.. ராமநாதபுரத்தில் திமுக Vs பாஜக .. யாருக்கு பலம்?
சென்னை: வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் தமிழ்நாட்டில் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டில் ஆன்மிக ஸ்தலமாகக் கருதப்படும் ராமேஸ்வரத்தில் வருகின்ற மக்களைவைத் தேர்தலில் மோடி போட்டியிடப் போவதாகக் கடந்த சில மாதங்களாகவே அரசியல் வட்டாரத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.
அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'அடுத்து தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் பிரதமராக வருவார்' என்று பொடிவைத்துப் பேசி அந்த வதந்திக்கு வலுசேர்த்துவிட்டுச் சென்றார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் போட்டியிட்ட மோடி மாபெரும் வெற்றியைப் பெற்றார். அதைப்போன்று 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் வாரணாசி தொகுதியிலும் கூடுதலாகக் குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வென்றார். வெற்றிக்குப் பின்னர் வதோதரா எம்.பி. பதவியை மோடி ராஜினாமா செய்தார்.
வாரணாசி ஆன்மிக தலம். அங்கே பாஜகவின் செல்வாக்கு அதிகம். ஆகவே மோடி அந்தத் தொகுதியை வைத்துக் கொண்டு, வதோதராவைக் கைகழுவினார். தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரமும் ஆன்மிக பூமி.

ஆகவே மோடி இந்த ஆலோசனையைப் பரிசீலிக்க வாய்ப்பு இருப்பதாக வலதுசாரி அரசியல் விமர்சகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் வரப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் 'ஹாட் ஸ்பாட்' ஆக மாறி இருக்கிறது.
ராமநாதபுரம் ஆன்மிக பூமி என்பதற்காக மட்டுமே பாஜக சார்பில் மோடி தேர்தலில் போட்டியிட முடியாது. அதற்கு வலுவான கட்சியின் கள நிலவரம் இருக்கவேண்டும். பாஜக ராமநாதபுரத்தில் அந்தளவுக்கு வலுவாக ஒன்றும் இல்லை. பாஜகவைவிட திமுக அங்கே வலுவான கட்சி. அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன் என்று அங்கே திமுகவிற்கு வலுவான கைகள் உள்ளனர்.

மோடியின் வதந்தி அலை வீசிக்கொண்டிருக்கும் போதுதான், திமுக மற்ற எல்லா கட்சிகளைவிட வரப்போகும் மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் தீயாக தன் வேலைகளைத் தொடங்கியுள்ளது. ராமநாதபுரத்தை மையமாக வைத்துக் கடந்த 2 நாள்களாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது பயணத்தால் இம்மாவட்ட மக்களை ஈர்த்து வருகிறார்.
அவர் நேரடியாகப் பல மீனவக் கிராமங்களுக்கு நடந்தே சென்று அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்.

இரண்டாம் கட்டமாக திமுகவைச் சேர்ந்த தென் மாவட்டங்களுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நேற்று ராமநாதபுரத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த முகாமில் இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி வடக்கு, தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு எனக் கன்னியாகுமரி வரை உள்ள திமுகவின் 19 மாவட்டங்களிலிருந்து 16,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர். திமுகவின் மின்னல் வேகமான தேர்தல் பணிகள் அக்கட்சியின் தொண்டர்களை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

ராமநாதபுரத்தின் கள நிலவரத்தை வைத்துப் பார்த்தால், பாஜக அங்கே சுத்தமாக 'சீனில்' இல்லை. அதற்கு இப்போதைய திமுக மாநாடு மட்டும் காரணம் அல்ல. கடந்தகால தேர்தல் வெற்றிகளும் அதையே சுட்டிக்காட்டுகின்றன. திமுக வலுவாக உள்ளது என்பதற்காக சில காரணங்களைப் பட்டியல் போட்டுப் பார்ப்போம்.
பட்டியல்: 1. நடைபெற்ற கடந்த 4 நாடாளுமன்றத் தேர்தல்களில், 3 தேர்தல்களில், அதாவது 2004, 2009, 2019 ஆகிய தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள்தான் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். நேரடியாக திமுக 2004 மற்றும் 2009 இல் வென்றுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2019ல் இங்கே வென்றுள்ளது.
2. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வென்ற போது, பாஜக மூன்றாம் இடத்திலிருந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக மூன்றாம் இடம் மட்டுமே பெற்றது. 2019 தேர்தலில் முன்னாள் அதிமுக அமைச்சர் நைனார் நாகேந்திரன் போட்டியிட்ட காரணத்தினால்தான் அதிமுகவின் தயவில் பாஜக இரண்டாம் இடத்தைப் பெற முடிந்தது என்று அரசியல் கணிப்புகள் கூறுகின்றன.

3. ராமநாதபுரத்தில் சுமார் 2 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜகவிற்கு இவர்கள் ஆதரவு பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை.
4. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் 4 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் & 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
5. திமுகவின் பலத்தைக் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் வாக்கு வித்தியாசத்தில் நாம் அறியலாம். திருச்சுழி தொகுதியில் 60,000 வாக்குகள் வித்தியாசம், ராமநாதபுரம் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசம், அறந்தாங்கி தொகுதியில் 30,000 வாக்குகள் வித்தியாசம், முதுகுளத்தூர் தொகுதியில் 20,000 வாக்குகள் வித்தியாசம்.

6. கடந்த 2022 ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள அனைத்து நகரப்புற உள்ளாட்சித் தொகுதிகளிலும் உள்ள 5 நகரங்களிலும், 9 பேரூராட்சிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது, திமுக தலைவர்களே சேர்மன் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
7. பொதுவாக திமுக ஊரகப் பகுதியில் பலவீனமாக உள்ளது என்று சிலர் விமர்சனம் செய்யும் நிலையில், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில், 3 ஊராட்சி ஒன்றியங்களை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக வேட்பாளர்களே சேர்மனாக வெற்றி பெற்றுள்ளனர்.
8. ராமநாதபுரத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள புதிய பேருந்து நிலையம், திமுக அரசு மூலமாகத் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டி தற்போது பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
9. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்திற்குக் கொண்டு வந்ததும் திமுகதான்.
10. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொள்ளும் வகையில் மீனவர் மாநாடு ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக திமுக அரசுதான் நடத்தியுள்ளது.

11.சமீப காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் நிற்கப் போவதாக வதந்திகள் வந்தாலும், பாஜக தலைமையிலிருந்து கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற நாடாளுமன்றத் தொகுதியில் முயற்சி செய்தால்கூட வாய்ப்பு இருக்கக் கூடும். ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜகவுக்குப் பிரகாசமான வாய்ப்புகள் இல்லை.
ஆகவே மோடி ராமநாதபுரத்தில் நிற்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் மேல்மட்ட தகவல்கள் சொல்கின்றன. இங்கு பாஜகவிற்கு 50% வாக்குச் சாவடிகளில்கூட பணியாளர்கள் இல்லை என்பதே களச்செய்தியாக உள்ளது.
12. ராமநாதபுரம் மாவட்டம், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள் பட்டியலில் திமுக ஆட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவத்துறை, கல்வித்துறை, உள்ளாட்சித் துறை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்த மாவட்டங்களில் ராமநாதபுரமும் ஒன்று.












Click it and Unblock the Notifications