ராமதாசுக்கு, ஸ்டாலின் தந்த "பிறந்த நாள் பரிசு"! பூரிப்பில் பாமக.. ஒரே நெகிழ்ச்சி.. என்ன நடக்கிறது?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியுடன் திமுக இணக்கமாக இருப்பது போல முதல்வர் ஸ்டாலின் எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
முதல்நாள் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து.. அடுத்த நாள் அவருக்கு "பிறந்தநாள் பரிசு" என அசத்தியுள்ளார் ஸ்டாலின்.
இதனால்தான் திமுக மற்றும் பாமக கூட்டணி பற்றிய பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் இப்போது புயலென கிளம்பியிருக்கிறது.
'மனநிறைவளிக்கிறது, உளமார்ந்த நன்றிகள்..' 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை.. ராமதாஸ் ட்வீட்
வன்னியர் உள் இட ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அதுவும் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் சில நிமிடங்களுக்கு முன்பாக, சட்டசபையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி. அதன்படி , வன்னியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றினார். இதன் பிறகு சட்டசபை தேர்தல் அறிவிப்புகள் வெளியாகி விட்டதால் அரசாணை வெளியிட முடியவில்லை.
தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பாதிப்பு
இந்த அறிவிப்பின் மூலமாக வடக்கு மண்டலங்களில் கணிசமாக உள்ள வன்னியர்கள் வாக்கு அதிமுக கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்தார். ஆனால், வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது . கொங்குமண்டலம் மட்டும் அதிமுகவுக்கு கைகொடுத்தது. அதேநேரம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், தென்மாவட்டங்களில் பல பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. அப்போது அமைச்சர்களாக இருந்த சில அதிமுக சீனியர் தலைவர்கள் பகிரங்கமாக இந்த உள் இட ஒதுக்கீட்டால் தென்மாவட்டங்களில் அதிமுக பாதிப்பு ஏற்படும் என்று அப்போது தெரிவித்திருந்தனர்.
திமுக மீது எதிர்பார்ப்பு
இப்போது, திமுக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது. எனவே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்படுமா அல்லது அந்த அறிவிப்பு கைவிடப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. திமுக அரசு கண்டிப்பாக இந்த உள் இட ஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பலமுறை ராமதாஸ் வலியுறுத்தி வந்தார்.
பிறந்த நாள் பரிசு
இந்த நிலையில்தான் உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்து நேற்று இரவு அரசாணை வெளியிட்டுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். இரு தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 83வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது சர்ப்ரைஸாக ஸ்டாலின், தொலைபேசியில் ராமதாஸை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அடுத்த நாளே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டு உள்ளார் ஸ்டாலின்.. ராமதாசுக்கு ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் பரிசாக இது பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் இதற்கு வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
திமுக-பாமக இணக்கம்
இந்த நிகழ்வுகள் அனைத்துமே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திமுக ஆகியவற்றுக்கு இடையே இணக்கமான சூழ்நிலை நிலவுவதை உறுதி செய்கிறது . அதிலும் குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இடையே கடந்த சில நாட்களாக நட்பும் நெருக்கமும் மேலும் அதிகரித்து வருவதை இந்த நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.
விஜயகாந்த் வீட்டில் ஸ்டாலின்
இப்படித்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின். திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிகவின் பொதுச்செயலாளர் வீட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான அந்தஸ்தில் இருப்பவருமான ஸ்டாலின் நேரடியாக சென்றது நல்ல பண்பாக பாராட்டப்பட்டது . இப்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
தேர்தல் காலம்
ஒரு பக்கம் இவை அனைத்தும் அரசியல் நாகரிகமாக பார்க்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது இந்த இணக்கம் பயன்படும் என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பல பகுதிகளில் வட தமிழகத்தில் உள்ளன. இங்கு பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி இருக்கிறது. 10 வருடங்கள் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இருந்ததால் இயல்பாக அதிருப்தி ஏற்பட்டிருக்கக் கூடிய காலகட்டத்தில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாமக தேர்தலை சந்தித்தால் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய கூட அதிக தொகுதிகளை வெல்ல முடியவில்லை.. தேமுதிகவும் அப்படித்தான் . செல்வாக்கு இழந்து போன அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் தோற்றது. மற்றபடி இந்த இரு கட்சிகளுக்கும் கணிசமாக வாக்குவங்கி இருக்கத்தான் செய்கிறது. இவை திமுக உடன் நெருக்கமாக இருந்தால் தேர்தலில் அது நல்ல பலனைக் கொடுக்கும். இதை முன்வைத்து திமுகவும் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது" என்று கண் சிமிட்டுகின்றனர் சில, அரசியல் பார்வையாளர்கள்.
பரபரக்கும் அரசியல்
திமுக கூட்டணியில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. ஆனால், பாமக பக்கத்தில் வரவேண்டும் என்பது மூத்த தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோரின் நீண்ட நாள் ஆசை. ஒருவேளை பாமக நெருங்கி வந்தால் , விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த மாதிரி நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தெரியவில்லை. எனவே இப்போதைக்கு ஸ்டாலினின் செயல்பாடுகளில் அரசியல் நாகரீகம் என்ற வகையில் கடந்து செல்லத் தக்கவை. கூட்டணி விஷயங்கள் வருங்காலங்களில் முடிவு செய்யப்படும் என்கின்றனர் திமுக வட்டாரத்தில்.