விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ளார்.

திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி காலமாகிவிட்டார். இதையடுத்து அந்த தொகுதி ஏப்ரல் 8ஆம் தேதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். இதனால் லோக்சபா தேர்தலுடன் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவ்வாறு ஏதும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வென்றது. இந்த நிலையில் விக்கிரவாண்டிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனுக்கள் பெறும் பணிகள் ஜூன் 14ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும். மிக குறைந்த காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன. அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
விக்கிரவாண்டி தேர்தல்.. பின் வாங்கும் அதிமுக? பாமகவை வைத்து செம கேம் பிளான்! ஆப்பு அவங்களுக்காமே
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது, யாரை பொறுப்பாளராக நிறுத்துவது போன்ற விவகாரங்களை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, கனிமொழி, கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இறந்த புகழேந்தியின் மகன் செல்வக்குமார் அல்லது அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் அதிகம் இருப்பதால் அந்த வாக்குகளை கவரும் வகையில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என கருதப்பட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ள அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அன்னியூர் சிவா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவரணியிலும் அவர் இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications