"செங்கோட்டையன் நீக்கப்பட்டதால் திமுக & பாஜகவுக்கு தான் லாபம்.." தராசு ஷ்யாம் சொல்லும் புது கணக்கு
சென்னை: அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டார். இது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையே செங்கோட்டையன் நீக்கத்தால் உண்மையில் யாருக்கு இதில் லாபம் என்பது குறித்து அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதாகச் சொல்லி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நேற்று ஓபிஎஸ்-டிடிவி தினகரனை செங்கோட்டையனை சந்தித்திருந்த நிலையில், அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்பது எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது. அதுதான் இப்போது நடந்துள்ளது.

தராசு ஷ்யாம்
இதற்கிடையே இது தமிழக அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், "அரசியலிலே இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்த்தால்.. ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி மூன்று பேர் ஒன்றாக இருப்பார்கள். சசிகலா ஆதரவு அதற்கு இருக்கும். ஆனால் அந்த மூன்று பேரும் சேர்ந்து தமிழ்நாட்டில் 20- 25 தொகுதிகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கி வைத்திருப்பார்கள். ஆனால், வெற்றிக்கு அது போதாது. அப்படி என்றால் இன்னொரு கூட்டணி வேண்டும்.
திமுகவுக்கே லாபம்
இப்போதைக்கு விஜய் தலைமையிலான ஒரே ஒரு கட்சிதான் மிச்சம் இருக்கிறது. விஜய் விருப்பம் என்ன என்று யாருக்கும் தெரியாது. இதில் திமுகவுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றால்.. திமுகவுக்கு எதிரான ஓட்டு வங்கி பிளவுபடும். நமக்குத் தெரிந்தே 4 அணிகள் உள்ளன. இவர்கள் இன்னொரு கூட்டணியில் சேரவில்லை என்றால் 5வது அணியாக இது மாறும். இப்படிப் பல பிரிவுகளாக திமுகவுக்கு எதிரான வாக்கு வங்கி பிளவுபடும். திமுகவுக்கு இது அரசியல் லாபமாகவே முடியும்.
எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணி 2026 தேர்தலிலே எத்தனை சீட்டுகளை வெல்லப் போகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.. திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிவதால் 75ல் நிற்பார்களா இல்லை.. அதை விட குறைந்துவிடுமா என்ற கணக்குகளைத்தான் போட வேண்டும். அது தேர்தல் நெருக்கத்தில் தான் அது நமக்குப் புரிய வரும்.
செங்கோட்டையன்
எம்ஜிஆருக்கு பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்து இருந்தபோது 30, 33 எம்எல்ஏக்கள் ஜானகி அணிக்கு போய்விடக்கூடாது என்பதால் அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு ஊர் ஊராகப் பயணம் மேற்கொண்டவர் செங்கோட்டையன்.
செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் இவர்களின் ஒட்டுமொத்த அதிமுக அனுபவம் என்பது எடப்பாடி பழனிசாமி அனுபவத்தை விட பல பல மடங்கு அதிகம். இதையும் நாம் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் மூன்று பேரும் தான் ஜெயலலிதாவிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்கள். எடப்பாடி பழனிசாமிக்கான முக்கியத்துவம் என்பது சமீப காலமாக வந்ததுதான். இவர்கள் எல்லாம் கிட்டத்தட்ட 1988 காலகட்டத்தில் இருந்து இருக்கிறார்கள்.
பாஜகவுக்கும் மகிழ்ச்சி
இந்தச் சம்பவங்கள் பாஜகவுக்கு கூட ஒரு வகையிலே மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் 2026 தேர்தல் என்பது பாஜகவுக்கு முக்கியமானது அல்ல. அதை நயினார் நாகேந்திரனே வெளிப்படையாகக் கூறிவிட்டார். 2026க்கு பிறகு அதிமுக மேலும் பலவீனப்பட்டால்.. அது நமக்கு நல்லது என்பதுதான் பாஜகவின் சிந்தனையாக இருக்கும். அதை அதிமுகவின் கீழ்மட்ட தொண்டர்கள் கூட புரிந்து வைத்துள்ளனர். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் புரிந்து கொள்ளவில்லை.. அல்லது புரிந்து கொள்ளாத மாதிரி இருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications