திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!
சென்னை: திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதேபோல் அந்த 5 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் இருவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், ஆஸ்டின் ஆகியோரை பொறுப்பாளராக நியமித்துள்ளது.
தமிழக அரசியல் களம் 5 தொகுதி இடைத்தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், ஆளும் கட்சிகளுக்கு கடும் சவால் கொடுக்கவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும் திமுக போர்க்கால அடிப்படையில் வியூகங்களை வகுத்து வருகிறது. திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இந்த இடைத்தேர்தலில், இளைஞர்களைக் கவரும் வகையிலும் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமீபகால அரசியல் மாற்றங்கள் மற்றும் தவெக போன்ற கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு வியூகங்களை முறியடிக்கும் வகையில் திமுக தனது வேட்பாளர் தேர்வில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து இடைத்தேர்தல் தொகுதிகளிலும் இந்த முறை மூத்த நிர்வாகிகளைத் தவிர்த்துவிட்டு, துடிப்புடன் செயல்படும் இளைஞர்களுக்கு சீட் கொடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
தேர்தல் பணிகளைத் தொய்வில்லாமல் கொண்டு செல்லவும், கள நிலவரங்களைச் சரியாகக் கையாளவும் இந்த 5 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக திமுகவின் மிக மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் இருவரை நியமிக்கத் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இவர்களின் அரசியல் அனுபவம் தேர்தல் வெற்றியை எளிதாக்கும் என நம்பப்படுகிறது.
ஐந்து தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அம்பாசமுத்திரம் தொகுதியைக் கைப்பற்ற திமுக ஏற்கெனவே தனது முக்கியத் தலைவர்களைக் களமிறக்கியுள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், ஆஸ்டின் ஆகியோரை பொறுப்பாளராக நியமித்துள்ளது.
திருச்சியில் ஏற்கனவே அடிமட்ட அளவில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த தொடங்கி இருக்கிறது. இதனிடையே திருச்சி கிழக்கு தொகுதியில் இஸ்லாமியர் ஒருவரை திமுக தலைமை வேட்பாளராக அறிவிக்கக் கூடும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. இதனால் திமுக அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிர இறங்கி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications