கூட்டணிக்கு ஒதுக்காதீங்க.. அந்த தொகுதி நமக்கு தான் வேண்டும்! நேரடியாக ஸ்டாலினிடம் முறையிட்ட திமுகவினர்.. என்ன நடந்தது?
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என்று திமுகவினர் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக தெரிய வந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ-வாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இருந்து வரும் நிலையில், கூட்டணிக்கு ஒதுக்க கூடாது என்று திமுகவினர் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆளுங்கட்சியாக திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே திமுக சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார்.

ஒன் டூ ஒன் மீட்டிங்
இதன் மூலமாக வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்க்கையில் அக்கட்சியில் நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர். சுமார் 30 சதவிகிதம் திமுக உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் இன்னொரு பக்கம் ஸ்டாலின், ஒருநாளுக்கு 3 தொகுதிகள் வீதம் திமுக நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
3 தொகுதிகள்
அந்தந்த தொகுதியின் பொறுப்பாளர், நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்று ஸ்டாலினிடம் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். அதேபோல் ஸ்டாலினும், ஒவ்வொரு தொகுதியிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளின் திமுக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
திமுகவினர் எதிர்ப்பு
ஏற்கனவே ராயபுரம் தொகுதியில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இம்முறை மாறி மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்க போவதாக கூறப்படுகிறது. இதனால் மயிலாப்பூர் தொகுதிக்கு கூடுதல் கவனம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை இம்முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க கூடாது என்று திமுகவினர் வலியுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தல்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் எம்எல்ஏ தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இருந்து வருகிறார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பழனியை விட சுமார் 10,879 வாக்குகள் வித்தியாசத்தில் செல்வப்பெருந்தகை வெற்றி பெற்றார். இம்முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பரந்தூர் புதிய விமான நிலையம் கட்டப்பட உள்ளது.
முடிவு என்ன?
இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், அது ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்பலாம் என்று பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே திமுகவினர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை கூட்டணிக்கு கொடுக்க கூடாது என்று கூறி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் செல்வபெருந்தகை தொகுதி மாறுவாரா அல்லது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications