எங்கு போட்டி..? நீங்களே பேசி சுமூக முடிவெடுங்கள்.. மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை ஃப்ரீடம்..!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் யார் யார் எங்கெங்கு போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி சுமூக முடிவெடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடரும் என்பதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உணர்த்தியுள்ளார்.
9 மாவட்டங்களில் மொத்தம் மூன்றாயிரத்து 67 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தலைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலை இக்கட்சிகள் சந்தித்தன.

கூட்டணி தொடரும்
இந்நிலையில் எதிர்வரும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா என கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அறிக்கை மூலம் விடையளித்துள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். அவர் விடுத்துள்ள அறிவிப்பில், நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்துபேசி சுமூக முடிவு செய்திட வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் எனக் கூறியிருக்கிறார்.

9 மாவட்டங்கள்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை பொறுத்தவரை அமைச்சர் தாமோ அன்பரசன் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் பகிர்ந்தளிக்கும் பணியில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் சிவ பத்மநாதன் ஆகியோர் கூட்டணிக் கட்சிகளுக்கு இடப் பங்கீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ.வும் கூட்டணிக் கட்சிகளுக்கு தேவையான இடங்களை உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட ஒதுக்குவார்கள் எனத் தெரிகிறது. இதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கும் பணியில் அமைச்சர்கள் ராணிப்பேட்டை ஆர். காந்தி மற்றும் துரைமுருகன் ஆகியோர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.

மாவட்டச் செயலாளர்கள்
இதனிடையே மேற்கண்ட இந்த 9 மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் பகிர்ந்தளிக்கும் பஞ்சாயத்தை, அண்ணா அறிவாலயத்துக்கோ முதலமைச்சருக்கோ கொண்டு வரக் கூடாது என்பதில் திமுக தலைமைக் கழகம் உறுதியாக உள்ளது. இதனால் தான் சுமூகமாக பேசி முடிவெடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு இருக்கும் அலுவல் பணிகளுக்கு மத்தியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் இந்த விவகாரத்தை அவரிடம் கொண்டு செல்லாமல் சமயோசிதமாக கையாளுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications