கோவில் உண்டியல்ல பணத்தை போடாதன்னு சொல்றது 'அதுக்கு' சமம்- நிர்மலா சீதாராமனுக்கு திமுக கண்டனம்
சென்னை: கோவில் உண்டியலில் பணத்தை போடாதன்னு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் பக்தர் ஒருவரிடம் கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. தமிழ்நாட்டு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என கூறினார். பெருமழையை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்காமல் பேரிழப்பு ஏற்பட்டது என்ற புகாரை மறுத்து வானிலை ஆய்வு மையம் அதி நவீனமாகத்தான் இருக்கிறது என விளக்கம் கொடுத்தார். மேலும் தமிழ்நாடு அரசு சென்னை வெள்ள தடுப்புக்கு ஒதுக்கிய ரூ4,000 கோடி எங்கே எனவும் கேள்வி எழுப்பினார். அத்துடன் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய, உங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம் என்ற கேள்விக்கு பாஷை சரியில்லை எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த் டெல்லி பேட்டியும் அவரது உடல் மொழியும் தமிழ்நாட்டில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்பு பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார்.
அத்துடன் ஶ்ரீ வைகுண்டம் பெருமாள் கோவிலில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். அப்போது பெருமாள் கோவில் அர்ச்சகர்கள், பாதை சரியில்லை என தெரிவித்திருந்தனர். பெருமாள் ஊர்வலம் வரும் பாதையில் அசுத்தங்கள் இருப்பதாகவும் முறையிட்டிருந்தனர். அப்போது பக்தர் ஒருவர் தாம் ரூ30,000 தர தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உண்டியலில் அந்த பணத்தை போடாதப்பா.. எங்க கொடுக்கனுமோ அங்க கொடுங்க என அறிவுறுத்தினார்.
கோவிலில் உண்டியலில் பணத்தைப் போட்டு அந்த கணக்குகளை முறையாக பராமரிப்பது இந்து சமய அறநிலையத்துறை. அரசின் கீழ் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உண்டியலில் பணத்தை போடக் கூடாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
கோவில் உண்டியல்ல பணத்தை போடாத தட்டுல போடுனு சொல்றதும்!
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) December 27, 2023
அரசாங்கத்துக்கு வரியை கட்டாத
கள்ள கணக்கு காட்டுனு சொல்றதும்
ஒன்றுதான்!!
இதில் நீங்க இந்தியாவின் நிதி அமைச்சர் வேற..
நாடு வெளங்கிடும்🤦🏻
@nsitharaman
இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கோவில் உண்டியல்ல பணத்தை போடாத தட்டுல போடுனு சொல்றதும்! அரசாங்கத்துக்கு வரியை கட்டாத கள்ள கணக்கு காட்டுனு சொல்றதும் ஒன்றுதான்!! இதில் நீங்க இந்தியாவின் நிதி அமைச்சர் வேற.. நாடு வெளங்கிடும் . இவ்வாறு திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications